மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகமாக அடிக்கும் புல் ஷாட்டின் பெயரை ரோகித் சர்மா ஷாட் என்று மாற்ற வேண்டும் என்று இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா சேர்க்கப்படவில்லை, அதன்பின் நடைபெற்ற 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தொடக்க வீரராக விளையாடினார் ரோகித் சர்மா. அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் துணை கேப்டனாக களமிறங்கினார். தற்போது சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையில் கேப்டனாக களமிறங்கியுள்ளார்.ரோகித் சர்மா எப்படி படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளாரோ, அதேபோல் ஒரு பேட்ஸ்மேனாகவும் படிப்படியாக முன்னேற்றம் அடைந்துள்ளார். ஆனால் ரோகித் சர்மாவிடம் மாறாத ஒன்று உள்ளது. அதுதான் அவரின் புல் ஷாட். 2007 டி20 உலகக்கோப்பை தொடரிலேயே புல் ஷாட் மூலம் சிக்சர் அடித்த ரோகித் சர்மா, அதனையே தனது ஆயுதமாக்கி புல் ஷாட்டால் என்றாலே ரோகித் சர்மா தான் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா. அந்த போட்டியில் ரோகித் சர்மா அடித்த சிக்சர்கள் இந்திய அணி ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அந்த அளவிற்கு புல் ஷாட் மூலம் அபாரமான சிக்சர்களை விளாசினார்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் புல் ஷாட் குறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பேசுகையில், என்னை பொறுத்தவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் ஒரு ஷாட் மூலமாக தான் அடிக்கப்பட்டிருக்கும். அந்த ஷாட்டை தான் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனது ஆயுதமாக வைத்துள்ளார். அந்த ஷாட்டின் பெயரையே ரோகித் சர்மா ஷாட் என்று மாற்ற வேண்டும் என்கிற அளவிற்கு புல் ஷாட்டில் கில்லாடியாக உள்ளார். அந்த ஷாட்டை அவ்வளவு கிளாஸாகவும், உறுதியாகவும் விளையாடுகிறார்.
130 கிமீ முதல் 135 கிமீ வேகத்தில் பந்துவீசும் பவுலர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், சோயப் அக்தர் போல் 150 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்களுக்கு எதிராகவும் ரோகித் சர்மாவால் எளிதாக புல் ஷாட் மூலம் சிக்சரை விளாச முடியும். சச்சின் டெண்டுல்கர் போன்ற ஜாம்பவான் 44 இன்னிங்ஸ்களில் 6 சதங்காளை அடித்திருக்கும் போது, அதனை ரோகித் சர்மா 19 இன்னிங்ஸ்களில் செய்கிறார். இதன் மூலமாக ரோகித் சர்மா உலகக்கோப்பை தொடருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.