மும்பை: யு18 கோச் பெகார் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் பவுலிங் செய்யும் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர் மீது ஏராளமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கேற்றபடி உள்ளூரு கிரிக்கெட் போட்டிகளிலும் அர்ஜூன் டெண்டுல்கர் பெரியளவில் செயல்பட்டதில்லை.

மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கோவா அணிக்கு மாறினார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசு களமிறங்கியுள்ளது. இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட் தொடரான யு18 கோச் பெகார் டிராபி தொடரில் களமிறங்கியுள்ளார்.
18 வயதாகும் சமித் டிராவிட் கர்நாடகா அணிக்காக ஆடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் 7 போட்டிகளில் ஆடியுள்ள சமித் டிராவிட் 3 அரைசதங்கள் உட்பட 370 ரன்களை விளாசியுள்ளார். பேட்டிங் மட்டுமல்லாமல் சமித் டிராவிட் நல்ல ஆல்ரவுண்டர் என்று தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் யு18 கோச் பெகார் டிராபியின் இறுதிப்போட்டியில் மும்பை அணியை எதிர்த்து கர்நாடகா அணி விளையாடியது.
இந்த போட்டியில் மும்பை அணி 380 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்த போட்டியில் 19 ஓவர்களை வீசிய சமித் டிராவிட் 60 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த நிலையில் சமித் டிராவிட் பந்துவீசிய வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் சமித் டிராவிட் நல்ல லெந்தில் பிட்ச் செய்து பந்தை வீசுகிறார்.
இதனால் விரைவில் சமித் டிராவிட் ஐபிஎல் தொடரில் நெட் பவுலராக இடம்பிடிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் ராகுல் டிராவிட் தனது மகனுக்கு பயிற்சியளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். தன் மகனுக்கு பயிற்சியாளராக இருக்கும் போது தந்தை மற்றும் பயிற்சியாளர் என்று இரண்டு ரோலையும் செய்ய வேண்டிய நிலை வரும். அதனால் பயிற்சியளிக்க மாட்டேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.