மும்பை : இந்திய கிரிக்கெட்டில் உயிர்நாடியாக இருக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1934 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களுக்கு தான் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்கும்.
ஆனால் சமீப காலமாக ஐபிஎல் தொடரில் யார் நன்றாக விளையாடுகிறார்களோ, அவர்களை தான் இந்திய அணியில் தேர்வு குழுவினர் சேர்த்து வருகிறார்கள். குறிப்பாக சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் விளையாடுவதன் மூலம் இந்திய அணிக்குள் வந்தார்.

மேலும் டெஸ்ட் போட்டியிலும் அவர் அறிமுகமான காமெடியும் நடைபெற்றது. இதனால் ரஞ்சி கிரிக்கெட்டிலே சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இன்னும் சர்பிராஸ் கான் ஒரு டெஸ்ட் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தன்னுடைய மகிமையை இழந்து வருகிறது.
இதன் காரணமாக ரஞ்சி கோப்பை தொடரை அடுத்த சீசனில் இருந்து ரத்து செய்ய வேண்டும். ரஞ்சி கோப்பை தொடர் மொத்தமாகவே தவறாக இருக்கிறது. இந்தப் பாரம்பரியம் மிக்க தொடரை பாதுகாக்க வேண்டும் என்றால் பல விஷயங்களை சரி செய்ய வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க தொடராக ரஞ்சி கிரிக்கெட் இருக்கிறது. ஆனால் அதன் மகிமை தற்போது இழந்து வருவதை பார்க்கும் போது மிகவும் வெறுப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் இதை தொடர்ந்து பேசிய அவர் கேரளாவில் எங்களை ஒரு சாதாரண மைதானத்தில் விளையாட வைக்கிறார்கள். அந்த மைதானத்திற்கும் நாங்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கும் மிகவும் தூரமாக இருக்கிறது. அந்த மைதானத்தில் இருக்கும் வீரர்கள் அறை எல்லாம் ஒன்று கூட சரியில்லை. எதிரணியினர் பேசுவது எங்கள் காதிலும் நாங்கள் பேசுவது எதிரணி காதிலும் விழுகிறது.
இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் பிசிசிஐ கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். ரஞ்சி கிரிக்கெட் தொடரில் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ள நிலையில் தற்போது அந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை என்று மனோஜ் திவாரி போன்ற முன்னாள் வீரர்கள் புகார் அளித்திருக்கிறார்கள்.