டெல்லி: ரஞ்சி கோப்பை போட்டியில் இன்று டெல்லி மற்றும் மேற்கு வங்க அணிகளுக்கு நடுவேயான போட்டியின்போது, இரு அணி கேப்டன்களான கம்பீர் மற்றும் மனோஜ் திவாரி நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. "வெளியே வா பார்த்துக்கொள்ளலாம்.." என்று இருவரும் சத்தம்போடும் அளவுக்கு நிலைமை மோசமாக போனது. குறுக்கே வந்த நடுவரையும் கம்பீர் தள்ளிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டின் முக்கியமான போட்டித்தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடந்து வருகிறது. டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று டெல்லி மற்றும் மேற்கு வங்க அணிகள் மோதின. மே.வங்கம் பேட் செய்தபோது, 7.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. சாரதி பட்டாச்சார்ஜி விக்கெட் விழந்ததை தொடர்ந்து 4வது வரிசையில் கேப்டன் மனோஜ் திவாரி களமிறங்கினார்.
தொப்பி அணிந்தபடி பேட் செய்ய வந்தார் திவாரி. ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மனன் ஷர்மா ஓடிவர ஆரம்பித்தபோது, திடீரென கை நீட்டி தடுத்து நிறுத்திய திவாரி, டிரஸ்சிங் அறையை நோக்கி, தனக்கு ஹெல்மெட் வேண்டும் என்று கையை ஆட்டி சைகை செய்தார்.
திவாரி வேண்டுமென்றே காலம் கடத்த முற்படுவதாக நினைத்த, டெல்லி அணியினர் அதிருப்தியடைந்தனர். ஸ்லிப் பகுதியில் நின்றுகொண்டிருந்த டெல்லி கேப்டன் கம்பீர், திவாரியின் அருகே நடந்து வந்து, காலம் கடத்த நாடகமாடுவதாக திட்ட ஆரம்பித்துவிட்டார். "சாயங்காலம் வெளியே வருவல்ல.. அப்போது என் கையால் அடிபடுவ" என்று கம்பீர் கூறியதாக தெரிகிறது.
இதை கேட்டு கோபமடைந்த திவாரி, "எதற்கு, சாயங்கலாம் வரை காத்திருக்கனும். இப்போதே வெளியே போய் செட்டில் செய்துவிட்டு வருவோம்" என்று சத்தம் போட்டுள்ளார்.
இதைப்பார்த்த நடுவர் ஸ்ரீநாத் இரு வீரர்களின் குறுக்கே வந்து சமாதானம் செய்தார். அவரை தள்ளிவிட்டு சண்டையை தொடர்ந்தார் கம்பீர். இதன்பிறகு ஒருவழியாக சில நிமிடங்கள் பிறகு சண்டை முடிவுக்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு, இரு வீரர்களுக்கும், போட்டி ரெஃப்ரி வால்மிக் பச், சம்மன் அனுப்பியுள்ளார்.
நடுவரை தள்ளிவிடுவது, விதிமுறைப்படி மிகப்பெரிய தவறாகும். அந்த வீரருக்கு தடை விதிக்க விதிமுறையில் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.