மும்பை: தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடைசி பந்து வரை மனம் தளராமல் வெற்றிக்காக போராடக் கூடிய வீரர் என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். தற்போதைய இந்திய அணியில் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இரு வீரர்களில் அஸ்வினும் ஒருவர். ஆசியக் கோப்பை தொடரில் அக்சர் படேல் காயமடைந்ததன் காரணமாக, கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இதன்பின்னர் சுழற்பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார் அஸ்வின். இதன்பின் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார். சுமார் 3 ஆயிரம் நாட்களுக்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கினார்.
சொந்த மண்ணில் களமிறங்கிய அஸ்வினுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய 10 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும், தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பதற்றத்திலேயே வைக்க உதவியாக இருந்தார்.
இந்த நிலையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனுபவம் வாய்ந்த வீரர் என்பது மட்டுமல்லாமல், கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடக் கூடிய வீரர். எனக்கு தெரிந்த வரை, அவரை அவ்வளவு எளிதாக வீழ்த்திட முடியாது.
ஒவ்வொரு ஆட்டத்தையும் அஸ்வின் அணுகும் விதம் மிகச்சிறப்பாக உள்ளது. நல்ல பவுலராகவும், டெய்லண்டர் பேட்ஸ்மேனாகவும் அஸ்வினை அதிகம் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் சேர்க்கப்படாத நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பிளேயிங் லெவனில் அஸ்வின் இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.