மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமிக்கு முத்தம் கொடுத்து அஸ்வின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதன் மூலமாக 4வது முறையாக உலகக்கோப்பை அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி அமைந்தார். 9.5 ஓவர்களில் 57 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார் முகமது ஷமி.

அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் சிறந்த பந்துவீச்சாகவும் ஷமியின் 7 விக்கெட்டுகள் அமைந்தது. அதேபோல் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் ஷமி படைத்தார். இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் மட்டும் ஆடியுள்ள முகமது ஷமி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இதன் மூலம் கோல்டன் பாலுக்கான ரேஸில் முகமது ஷமி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இத்தனை சாதனையை படைத்துள்ள முகமது ஷமி ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துடன் நட்சத்திர வீரர் முகமது ஷமி ஓய்வறைக்கு இந்திய அணியை அழைத்து சென்றார். இதன்பின் ஓய்வறையில் இருந்த இந்திய அணி வீரர்கள், நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் அனைவரும் முகமது ஷமியை கட்டியணைத்து பாராட்டு தெரிவித்தனர்.

அதன் உச்சமாக தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முகமது ஷமியின் கைகளுக்கு முத்தமிட்டு பாராட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் விக்கெட் வீழ்த்துவதற்கு திணறிய போது ஒற்றை ஆளாக நியூசிலாந்து பேட்டிங் வரிசையை திணறடித்தார் முகமது ஷமி. அதேபோல் வான்கடே மைதானத்திற்கு வந்த சாஹல், இந்திய அணியின் ஓய்வறைக்கு வந்து முகமது ஷமியை பாராட்டி சென்றார்.