ட்ரினிடாட்: இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் அதிக பணம் சேர்ந்துவிட்டதால், கூடவே ஈகோவும் திமிரும் அதிகரித்துவிட்டதாக கபில் தேவ் விமர்சித்திருந்த நிலையில், இந்திய வீரர் ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடருக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளது. ஆனால் இந்திய அணியோ உலகக்கோப்பைத் தொடருக்கே தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களான பும்ரா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரின் காயம் பெரும் பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி ஜாம்பவான் வீரர் கபில் தேவ் காட்டமாக விமர்சித்தார். அதில், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்களில் விளையாடுவதால் இந்திய வீரர்கள் அதிக பணத்தை சம்பாதிக்கிறார்கள். அதனால் ஈகோவும், திமிரும் இந்திய வீரர்களுக்கு அதிகரித்துவிட்டது. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையுடன் இருக்கிறார்கள்.
சிறிய காயத்துடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள், இந்திய அணிக்காக சிறிய காயத்துடன் களமிறங்குவதில்லை. ஐபிஎல் தொடருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை, இந்திய அணிக்காக அளிக்க வேண்டும். ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் வாழ்வின் பெரும் பகுதியை கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். அவரிடம் கூட யாரும் உதவியையோ, கருத்துகளையோ கேட்பதில்லை என்று விமர்சித்தார்.
இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுபோன்ற விவகாரங்களை சோசியல் மீடியாவில் தேடி பார்ப்பதில்லை. அதனால் கபில் தேவ் என்ன சொல்லி இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். ஒரு முன்னாள் வீரராக கபில் தேவ் அவரின் கருத்துகளை சொல்வதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது.

ஆனால் கபில் தேவ் கூறுவதை போல் இந்திய வீரர்கள் யாரிடமும் ஈகோவோ, ஆணவமோ இல்லை. இந்திய வீரர்கள் அனைவரும் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்துடன் விளையாடி வருகிறோம். அதற்காக கடுமையாக உழைக்கிறோம். பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபடுகிறோம். யாரும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்வதே இல்லை. ஒவ்வொரு வீரரும் களத்தில் 100% திறமையை வெளிப்படுத்துகிறோம்.
இந்திய அணி தோல்வியடையும் போது இதுபோன்ற கருத்துகள் வரும். என்னை பொறுத்தவரை இந்திய அணி சிறந்த வீரர்களுடன், சிறந்த அணியாக செயல்படுகிறது. நாங்கள் இந்தியாவுக்காக விளையாடுகிறோம். அதுதான் எங்களின் ஒரே குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். ஜடேஜாவின் கருத்துகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக விவாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.