பெங்களூர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 அரைசதங்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு பின் பெங்களூருவில் ஐபிஎல் போட்டி நடப்பதால், ஆர்சிபி ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக மைதானத்தில் குவிந்தனர்.
விராட் கோலி மைதானத்தில் கால் பதித்த நொடியில் தொடங்கிய ரசிகர்களின் கரகோஷம், அவர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசி முடிக்கும் வரை ஓயவில்லை. மீண்டும் ஒருமுறை சின்னசாமி மைதானத்தின் கிங் யார் என்பதை விராட் கோலி நிரூபித்துள்ளார்.
மும்பை அணி நிர்ணயித்த 172 ரன்கள் என்ற இலக்கை, ஆர்சிபி அணி 16.2 ஓவர்களில் சேஸ் செய்து அசத்தியது. பீஸ்ட் மோடில் ஆடிய விராட் கோலி 38 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதனால் மீண்டும் பழைய சேஸ் மாஸ்டர் வந்துவிட்டதாக விராட் கோலியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி அரைசதம் விளாசியதன் மூலம் முக்கிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 50 அரைசதங்கள் விளாசிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதுவரை 45 அரைசதங்கள் மற்றும் 5 சதங்கள் விளாசியதன் மூலம் விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் ரசிகர்கள் இல்லாத மைதானங்களில் விளையாடிய விராட் கோலி, பேட்டிங் ஃபார்மை இழந்து தவித்து வந்தார். தற்போது சூழல் சரியாகி ரசிகர்களுடன் கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால், ரசிகர்களின் எனர்ஜியை தனக்கான உத்வேகமாக மாற்றி இழந்த ஃபார்மில் இருந்து மீண்டெழுந்து புதிய அத்யாயத்தை எழுதி வருகிறார் விராட் கோலி.
அதேபோல் ஒவ்வொரு முறையும் ஈ சாலா கப் நம்தே என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்பிக்கையாக பேசி வரும் நிலையில், மீண்டும் விராட் கோலி பீஸ்ட் ஃபார்மில் இருப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் விராட் கோலியின் பெங்களூரு அணி இதுவரை ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.