பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு வருத்தத்தை கொட்டி இருக்கிறார். அதில் தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றியை உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடியதையும், அதை வீடியோ எடுத்து வெளியிட்டிருந்ததாகவும், அதை ஐபிஎல் நிர்வாகம் காப்பிரைட் காரணத்தை முன்வைத்து இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் கூறி நீக்கிவிட்டதாகவும் புலம்பி இருக்கிறார். இது தனக்கு மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறி இருக்கிறார்.
ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், அது குறித்து சித்தார்த் மல்லையா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், ஒரு வீடியோவை நீக்கியது அவருக்கு வேதனை அளிக்கிறது. தாங்கள் துவங்கிய ஆர்சிபி அணியால் 11 ரசிகர்கள் உயிரிழந்தது அவருக்கு வேதனையாக இல்லையா? அதை ஒரு பொருட்டாகக் கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

2025 ஐபிஎல் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றது ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அது அந்த அணியின் ரசிகர்களை உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்த்தி இருந்தது. அந்த அணியை உருவாக்கிய முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவும் உணர்ச்சிப் பெருக்குடன் கொண்டாடினார். தற்போது அவர் இங்கிலாந்தில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சின்னசாமி மைதானத்திற்கு வர முடியாத அவர், 18 ஆண்டுகள் கழித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பை வென்றதை உணர்ச்சிப் பெருக்குடன் வீடியோ எடுத்து வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் அந்த இறுதிப்போட்டியின் தொலைக்காட்சி ஒளிபரப்பு காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இதுபோல சமூக வலைதளங்களில் ஐபிஎல் போட்டியின் காட்சிகளை வெளியிட்டால் அது காப்பிரைட் சட்டத்தின்படி நீக்கப்படும். அதன்படியே சித்தார்த் மல்லையா வெளியிட்டிருந்த அந்த வீடியோவும் காப்பிரைட் சட்டத்தின்படி நீக்கப்பட்டது. அவரது இன்ஸ்டாகிராம் கணக்கும் சில நாட்களுக்கு செயல்பட முடியாமல் போனது.
இது குறித்து தற்போது பேசியிருக்கும் சித்தார்த் மல்லையா, ஐபிஎல் நிர்வாகம் தனது உணர்ச்சிப் பெருக்கைக் காட்டுவதற்காக வெளியிட்ட வீடியோவை நீக்கி இருப்பது முட்டாள்தனம் எனக் கூறியிருப்பதோடு, இது தனக்கு மன வேதனையை அளித்ததாகக் கூறியிருக்கிறார். அதே சமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நடத்திய வெற்றி விழாவில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வீடியோவை நீக்கியதற்கு மன வருத்தம் அடையும் சித்தார்த், 11 உயிர்கள் பலியானதற்கு சற்றும் வருந்தவில்லையே? ஏன் அவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா? மனிதர்கள் இறப்பது ஒரு பொருட்டே இல்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே ஆர்சிபி அணியை தற்போதைய உரிமையாளரான டியாஜியோ நிறுவனம் விற்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்சிபி விற்பனைக்கு.. 17128 கோடிக்கு விற்க முடிவு செய்த உரிமையாளர்.. வெற்றி விழா பின்னணி இதுதானா?