சென்னை: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணியால் செய்யப்பட்ட தவறுகளை பட்டியல் போடும் அளவிற்கு இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட தோல்வியை சந்தித்தது. அதேபோல் 20 ஆண்டுகளுக்கு பின்னரும் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. சேப்பாக்கம் மைதானத்தில் Black Soil பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தும் ஆடம் ஸாம்பாவை மட்டுமே முதன்மை ஸ்பின்னராக களமிறக்கியது ஆஸ்திரேலியா.

அவருக்கு உதவி செய்யும் வகையில் மாற்று ஸ்பின்னரை அணியிலேயே வைத்து கொள்ளாமல் காயமடைந்த டிராவிஸ் ஹெட்டை தேர்வு செய்ததே முதல் பிரச்சனையாகும். இந்திய ஆடுகளங்களை நன்றாக அறிந்தும் ஒரேயொரு முன்னணி ஸ்பின்னருடன் ஆஸ்திரேலிய அணி எந்த தைரியத்தில் உலகக்கோப்பை தொடரில் விளையாட தரையிறங்கியது என்பதே ஆச்சரியம் தான்.
அதேபோல் இந்திய ஸ்பின்னரை எதிர்கொள்ள ஸ்வீப் ஷாட் ஒன்றே ஆயுதம் என்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தீவிர நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இந்திய வீரர்களிலேயே பலரும் ஸ்வீப் ஷாட்களை ஆடுவதில்லை. அதனால் அடிப்படையான விஷயமான கால்களை நகர்த்தி ஸ்பின்னர்களை எதிர்கொண்டாலே எளிதாக ரன்கள் சேர்க்க முடியும். குறிப்பாக ஸ்வீப் ஷாட் ஆடுகிறேன் என்ற பெயரில் லபுஷேன் செய்த அட்டகாசங்களை பார்ப்பதே காமெடியாக இருந்தது.
ஸ்பின்னர்களை எதிர்கொள்ள வேண்டுமென்றாலே கேமரூன் க்ரீனுக்கு வியர்த்துவிடும். அதனால் அவரை இப்போதும் மிடில் ஆர்டரில் விளையாட வைக்கும் முயற்சியை கைவிட்டு, தொடக்க வீரராக களமிறக்கலாம். மும்பை அணி நிர்வாகம் ஏற்கனவே கேமரூன் க்ரீன் டாப் ஆர்டர் வீரராக பயன்படுத்தியதை ஆஸ்திரேலிய நிர்வாகம் பார்க்க வேண்டும்.
இன்னொரு பக்கம் இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போது, மிட்செல் ஸ்டார்க்கிற்கு 3 ஓவர்களுடன் அட்டாக்கில் இருந்து வெளியேற்றினார் கம்மின்ஸ். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் விராட் கோலி, கேஎல் ராகுல் இருவரும் திணறுவார்கள் என்பது உலகறிந்த விஷயமாகும். அப்படியிருந்தும் கம்மின்ஸ் அட்டாக்கில் வந்து கேப்டனாகவும் சொதப்பினார்.
அதேபோல் முதன்மை ஸ்பின்னரான ஆடம் ஸாம்பாவை 17வது ஓவரில் அட்டாக்கில் கொண்டு வந்தது மிகப்பெரிய தவறாகும். ஏனென்றால் இந்திய அணிக்காக அஸ்வின், குல்தீப் யாதவ் பவர் பிளே ஓவர்கள் முடிந்த உடனே அட்டாக்கில் கொண்டு வரப்பட்டனர். பந்து சிறிது தேய்மானம் அடைந்த பின் ஆடம் ஸாம்பாவை கேஎல் ராகுல் வெளுத்து கட்ட, ஆட்டம் மொத்தமாக இந்திய அணி பக்கம் திரும்பியது.