
கட்டுப்பாடு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் போட்டிகள் குறைக்கப்பட்டன. முதல் தர போட்டிகளை சிறிது காலம் நடத்தப்போவதில்லை என பிசிசிஐ முடிவெடுத்தது. இதனால் உள்ளூர் போட்டிகளான சையது முஷ்டக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பையை மட்டுமே நடத்தியுள்ளது. தற்போது பெண்களுக்கான ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சம்பளம் இல்லை
இந்நிலையில் இதில் பணிபுரிந்த நடுவர்கள், போட்டி அதிகாரிகள், அலுவலர்கள் என 400க்கும் மேற்பட்டோருக்கு 2 மாதத்திற்கும் மேலாக பிசிசிஐ சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள நடுவர் ஒருவர், வழக்கமாக போட்டியை முடித்த பிறகு 15 நாட்களுக்குள் ஊதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால் சையது முஷ்டக் அலி கோப்பை நடந்து முடிந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் ஊதியம் ஏதும் வரவில்லை என தெரிவித்துள்ளார். இன்னும் சிலருக்கு கடந்த மார்ச் மாதம் முதலே ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

ஊக்கத்தொகையும் இல்லை
ராஞ்சி கோப்பை தடைபட்டுள்ளதால் அதில் மட்டுமே இதுவரை செயல்பட்டு வரும் வீரர்களுக்கு, அதிகாரிகளுக்கு, நடுவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க கடந்த டிசம்பர் மாதம் குழு ஒன்றை பிசிசிஐ அமைத்தது. ஆனால் 3 மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு ஊக்கத்தொகை குறித்து இதுவரை எந்த தகவலும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்படவில்லை.

காரணம்
ஊதியத்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிசிசிஐயில் இதுகுறித்த விஷயங்களை மேற்பார்வையிட யாரும் இல்லை என்பது தான் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்களை கண்காணித்து வந்த சபா கரீம் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவருக்கு அடுத்தபடியாக இருந்த கே.வி.பி ராவும் கடந்தாண்டு டிசம்பரில் பதவியில் இருந்து விலகினார். இதனால் பல்வேறு அதிகாரிகள், வீரர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும் கோரி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











