சிட்னி: "நான் எதிர்கொண்ட வீரர்களிலேயே மிகவும் திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அல்ல, அது பிரையன் லாரா தான்" என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். மேலும், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம் அளிக்கவில்லை. இது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது கிரிக்கெட் அனுபவங்கள் மற்றும் சிறந்த வீரர்கள் குறித்த தனது பார்வையைப் பாண்டிங் பகிர்ந்து கொண்டார். அப்போது, தொழில்நுட்ப ரீதியாக சிறந்த ஐந்து பேட்ஸ்மேன்கள் கொண்ட தனது பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

"நான் கேப்டனாக இருந்தபோது, வேறு எந்த பேட்ஸ்மேனையும் விட பிரையன் லாரா தான் எனது தூக்கத்தை அதிகமாகக் கெடுத்தார்," என்று பாண்டிங் குறிப்பிட்டார். மேலும், "லாரா ஆட்டத்தின் போக்கை சில நிமிடங்களிலேயே மாற்றக்கூடிய அபாரமான திறன் கொண்டவர். அவரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்," என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்ப ரீதியாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பாராட்டிய பாண்டிங், திறமையின் அடிப்படையில் லாராவே முதன்மையானவர் என்று குறிப்பிட்டார். "சச்சினின் பேட்டிங் நுட்பம் மிக நேர்த்தியாக இருக்கும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராகுல் டிராவிட்டும் அப்படித்தான்," என்று அவர் மேலும் கூறினார்.
ரிக்கி பாண்டிங் தனது தொழில்நுட்ப ரீதியாக சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தற்போதைய வீரர்களான இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோரையும் சேர்த்துள்ளார். சுவாரஸ்யமாக, இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை.
மேலும், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் குறித்து பேசிய பாண்டிங், "எண்கள் அவரை வரையறுக்காது. அவர் முக்கியமான தருணங்களில், கடினமான சூழ்நிலைகளில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். சிறந்த வீரர்களைப் பற்றி பேசும்போது, ஆட்டத்தில் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியே பேச வேண்டும்," என்றார்.
இந்த பட்டியலில் எந்த இடத்திலும் விராட் கோலி பற்றியோ, ரோஹித் சர்மா பற்றியோ ரிக்கி பாண்டிங் குறிப்பிடவில்லை. விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என வர்ணிக்கப்பட்டு வரும் நிலையில் அவரை பாண்டிங் தனது பட்டியலில் குறிப்பிடவில்லை. அதே போல ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ஆவார். அவரையும் புறக்கணித்து இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.
பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தங்களது காலத்தில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாகப் பரவலாகக் கருதப்பட்டனர். மூவருமே டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களுக்கு மேல் குவித்த சாதனையாளர்கள்.
குறிப்பாக, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரான 400 ரன்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமை பிரையன் லாராவுக்கு உண்டு. பாண்டிங்கின் இந்தக் கருத்து, "யார் சிறந்தவர்?" என்ற விவாதத்திற்கு மேலும் தூபம் போட்டுள்ளது.