மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இதில் சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 103 ரன்களை விளாசினார்.
இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை அணி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா இது மிகவும் சுவாரசியமான ஆட்டமாக இருந்தது.

எங்களுக்கு இந்த இரண்டு புள்ளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதலில் பேட்டிங் செய்து சராசரியான ஸ்கோரை எட்டுவோம் என்று தான் நினைத்தேன். ஆனால் இறுதியில் சூரியகுமார் யாதவ், அபாரமாக விளையாடி எங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இதேபோன்று நாங்கள் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தோம். ஏனென்றால் போகப் போக பந்துவீச்சுக்கு கடினமான சூழல் ஏற்பட்டது. பணிப் பொழிவு அதிகமாக இருந்ததால் பந்துவீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுத்தனர். இருப்பினும் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக இருந்தது.
சூரியகுமார் யாதவுக்கு இருக்கின்ற தன்னம்பிக்கை நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. நாங்கள் தொடரின் தொடக்கத்தில் இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருப்பது போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினோம். ஆனால் இன்று சூரிய குமார் அடம்பிடித்து தான் களத்துக்கு செல்வேன் என்று உறுதியாக கூறினார். இது போன்ற தன்னம்பிக்கை தான் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் தேவை.
அவருடைய இந்த தன்னம்பிக்கை கூட இருக்கும் பேட்ஸ்மேன்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கிறது. இது நல்ல விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிய ஆட்டமாக அவர் தொடங்குகிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் இப்படித்தான் யோசிக்க வேண்டும். சிலர் நாம் தான் சிறப்பாக விளையாடி விட்டோமே என்ற பெருமையில் இருந்து விடுவார்கள். ஆனால் சூரியகுமார் அப்படி அல்ல என்று ரோகித் சர்மா பாராட்டினார்.