மும்பை : இந்தியாவின் தலைநகரம் டெல்லியாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டின் தலைநகரம் என்றால் அது மும்பை தான், சுமார் 40 முறை ரஞ்சி கோப்பையை வென்று இருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
கவாஸ்கர், சச்சினை தொடர்ந்து அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட்டை ஆண்டவர் தான் ரோகித் சர்மா. விராட் கோலிக்கு முன்பே இந்திய கிரிகெட் அணிக்கு வந்தவர். இந்தியா 2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.

ரோகித் சர்மா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். குடும்ப கஷ்டம் காரணமாக தனது பாட்டி மற்றும் மாமாக்களுடன் வளர்ந்தார். அப்போது சிறு வயதில் பேப்பர் மற்றும் பால் பாக்கெட்டுகளை போட்டு இருக்கிறார். ரோகித் சர்மாவை தூக்கிவிட்டது கிரிக்கெட் மட்டும் தான். தனது அசாத்தியமான ஆட்டத்தால், மேலே உயர்ந்தார்.
ரோகித் சர்மா, 2006ஆம் ஆண்டு அண்டர் 19 கிரிக்கெட்டிலும் விளையாடி இருக்கிறார். ரோகித் சர்மா தனது லட்சியமான இந்திய அணியில் இடம்பிடித்தாலும், அவருக்கு பல தடைகள் காத்திருந்தது. எடுத்துக்காட்டாக ரோகித் சர்மா 2008ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இருந்தார்.

ஆனால் டாஸ் வீசுவதற்கு முன்பு அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால், தனது முதல் டெஸ்ட் போட்டிக்காக ரோகித் சர்மா 5 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதே போன்று ரோகித் சர்மாவுக்கு நடுவரிசையில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதில் ரோகித்தால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த முடியவில்லை.
இதனால் 2011ஆம் ஆண்டு உலககோப்பை உத்தேச அணியில் இருந்த ரோகித் சர்மாவால், பிரதான அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. அப்போது ரோகித் சர்மா போட்ட டிவீட், தற்போது வரை வைரல் ஆகி வருகிறது. நிச்சயம் நான் இந்திய அணிக்கு பிலமாக திரும்புவேன் என்று ரோகித் சர்மா சபதம் எடுத்தார்.
திறமை இருந்தாலும் , தூக்கி விட ஒரு கை வேண்டும் அல்லவா. ரோகித்தின் முழு திறமையை அறிந்த தோனி, அவரை தொடக்க வீரராக விளையாட வைத்தார். அதன் பிறகு அவருக்கு ஏற்றம் தான். இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே தொடக்க வீரர்கள் யாரும் செய்யாத பல சாதனையை ரோகித் சர்மா மேற்கொண்டார்.

எந்த ரோகித் சர்மாவுக்கு உலக கோப்பையில் இடம் கிடைக்கவில்லையோ, அதே ரோகித் சர்மா 2019ஆம் ஆண்டு உலககோப்பை தொடரில் 5 சதங்களை அடித்து சாதனை படைத்தார். இதே போன்று ஐபிஎல் தொடரில் தனது கேப்டன்ஷிப் திறமையை வெளிப்படுத்தி 5 கோப்பை வென்ற ரோகித்துக்கு தற்போது இந்திய அணியின் கேப்டன் பதவியும் தேடி வந்தது.
தற்போது 36வது வயதில் அடி எடுத்து வைத்திருக்கும் ரோகித் சர்மாவுக்கு 2 பெரும் சவால்கள் காத்துள்ளது. ஒன்று, வரும் ஜூன் மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றொன்று, அக்டோபர் மாதம் நடைபெறும் 2023ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி. இந்த இரண்டிலும் ரோகித் சாம்பியன் பட்டம் வென்றால், இது தான் அவருடைய வாழ்க்கையில் சிறந்த ஆண்டாக அமையும். எப்போதும் பல சவால்களை சந்தித்து வென்ற ரோகித்துக்கு, 36வது பிறந்தநாள் பல உச்சத்தை கொடுக்க வேண்டும் என்று தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துவோம்.