மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி 76 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை ஒன்றைச் செய்திருக்கிறார். விராட் கோலி செய்த ஒரு சாதனையையும் முறியடித்திருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பதிவு செய்திருக்கிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற வீரராகத் தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் இருக்கிறார். அவர் இதுவரை 25 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருக்கிறார்.

அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் இருக்கிறார். அவர் 22 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருக்கிறார். மூன்றாவதாக ரோஹித் சர்மா தற்போது இடம் பிடித்திருக்கிறார். அவர் 20 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருக்கிறார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் செய்திருக்கிறார்.
நான்காவது இடத்தில் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார். அவர் 19 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருக்கிறார். ஐந்தாவது இடத்தில் டேவிட் வார்னர் மற்றும் தோனி இடம் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் தலா 18 முறை ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளனர்.
25 - ஏபி டி வில்லியர்ஸ்
22 - கிறிஸ் கெய்ல்
20 - ரோஹித் சர்மா
19 - விராட் கோலி
18 - டேவிட் வார்னர்
18 - எம் எஸ் தோனி
IPL 2025: அடுக்கடுக்கான தவறுகள்.. சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
மேலும், இந்த போட்டியில் 45 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்த ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவானை முந்தி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். விராட் கோலி இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார் ரோஹித் சர்மா.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி (8326 ரன்கள்) முதலிடத்திலும், ரோஹித் சர்மா (6786 ரன்கள்) இரண்டாமிடத்திலும், ஷிகர் தவான் (6769 ரன்கள்) மூன்றாமிடத்திலும் உள்ளனர்.