டெல்லி : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை முறியடித்து தற்போது ரோகித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில் முதல் சில ஓவர்களில் இந்திய அணி சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறியது.

எனினும் கார்களில் வேகமாக செல்வதற்கு கீர்களை மாற்றுவது போல் ரோகித் சர்மாவும் ரன் குவிக்கும் வேகத்தில் கீரை ஒன்றிலிருந்து நேராக 5க்கு மாற்றினார். ஆப்கானிஸ்தான் வீரர்கள் எப்படி பந்து வீசினாலும் அந்த பந்தை பொளந்து எடுப்பது என முடிவெடுத்த ரோஹித் சர்மா, பட்டையை கிளப்பினார். குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் பாசல் ஓவரில் ரோகித் சர்மா பிரித்து மேய்ந்தார். இதன் மூலம் ரோகித் சர்மா 30 பந்துகளில் 53 ரன்களை கடந்தார். தொடர்ந்து ரோகித் சர்மா தன்னுடைய அதிரடியை நிறுத்தாமல் விளையாடினார்.
இந்திய அணி மிக விரைவில் இலக்கை கடந்தால் ரன் ரேட்டில் பாகிஸ்தானை முந்தலாம் என்பதால் ரோகித் சர்மா தன்னுடைய குறிக்கோளை நோக்கி குதிரை போல் ஓடினார். டெல்லி ரசிகர்களுக்கு ஒரு மாதம் முன்பே தீபாவளியை காட்டிய ரோகித் சர்மா ரசிகர்களுக்கு தன்னுடைய பேட்டிங் மூலம் வாண வேடிக்கை காட்டினார். இதன் மூலம் ரோகித் சர்மா 63 பந்துகளில் 100 ரன்கள் கடந்தார். இதில் 12 பவுண்டரிகளும் நான்கு இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் 7 சதம் அடித்து ரோகித் சர்மா சச்சின் சாதனையை முறியடித்திருக்கிறார். டெண்டுல்கர் 44 இன்னிங்சில் 6 சதம் அடித்திருந்த நிலையில் ரோகித் சர்மா 19 இன்னிங்ஸில் எல்லாம் 7 சதங்களை அடித்திருக்கிறார். மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மாவுக்கு கிடைத்தது.
இதற்கு முன்பு கபில்தேவ் இந்த சாதனையை 72 பந்துகளில் படைத்திருந்த நிலையில் தற்போது ரோகித் சர்மா முறியடித்திருக்கிறார். இதே போன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 31வது சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறிடியத்து இருக்கிறார்.