முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் குவித்து சிறப்பாக ஆடி இருந்தார். ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருந்தார். ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு அவர் பேசுகையில், தனக்கு கிடைத்த அதிர்ஷ்ட வாய்ப்பை வைத்து ரன் குவித்ததாகக் குறிப்பிட்டார்.
இந்தப் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி ரோகித் சர்மா கொடுத்த இரண்டு கேட்ச் வாய்ப்புகளைத் தவறவிட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் அடித்தார். இது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது நான்காவது அரை சதமாக அமைந்தது. இந்த ஆண்டுதான் வெறும் நான்கு அரை சதங்கள் மட்டுமே அடித்திருப்பதாக அதிருப்தியையும் வெளிப்படுத்தினார் ரோகித் சர்மா.

இது பற்றி அவர் பேசுகையில், "இந்த ஆண்டு நான்கு அரை சதங்கள் மட்டுமே அடித்திருக்கிறேன். இன்னும் நிறைய அடித்திருக்கலாம் என நினைக்கிறேன். எலிமினேட்டர் போட்டியில் விளையாடுவதன் முக்கியத்துவம் எனக்கு நன்றாகப் புரிந்திருந்தது. இந்தப் போட்டியில் எங்களின் செயல்பாடு ஒட்டுமொத்த அணியின் செயல்பாடாக இருந்தது. எனது சிறந்த ஆட்டத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பதைப் பற்றி நான் முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்."
"இன்று அதிர்ஷ்டம் எனது பாதையில் இருந்தது. அதை நான் முழுவதுமாக பயன்படுத்திக் கொண்டேன். அதைச் செய்ய முடிந்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எனது அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது நல்ல உணர்வை அளித்தது. இங்கு பனிப்பொழிவு இருக்கும் என்பதால் எங்களுக்கு சவாலாக இருக்கும் என்பது தெரியும். நான் அடித்த ஷாட்கள் அனைத்தும் ஏற்கனவே பலமுறை நான் அடித்த ஷாட்கள் தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவை ஃபீல்டர்களைச் சென்று அடைந்தது. ஆனால் அந்தக் கேட்சுகள் பிடிக்காமல் போனது எனது அதிர்ஷ்டம் தான்" என்றார் ரோகித் சர்மா.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 228 ரன்கள் எடுத்தது. ரோகித் சர்மா 81 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 22 பந்துகளில் 47 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 20 பந்துகளில் 33 ரன்களும், திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்களும், ஹர்திக் பாண்டியா 9 பந்துகளில் 22 ரன்களும் எடுத்திருந்தனர். அடுத்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.