மும்பை : இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை உருவ கேலி செய்து ரசிகர்கள் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். ரோகித் சர்மா கொஞ்சம் பருமனான தோற்றத்துடன் காணப்படுவதால் இந்த பெயரைச் சொல்லி அவரை பலரும் கிண்டல் செய்வது உண்டு.
தாங்கள் செய்வது தவறு என்பதை கூட தெரியாமல் அப்பாவி ரசிகர்கள் இதனை செய்து வருகிறார்கள். ரோகித் சர்மா உடல் எடை அதிகமாக இருந்தாலும் அவர் பேட்டிங்கில் எப்போதுமே அதிரடியாக விளையாடி வருகிறார்.

எனினும் கடந்த சில நாட்களாக ரோகித் பழையபடி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பதில்லை. இதன் காரணமாக ரோகித் சர்மா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் கபில்தேவ் போன்ற வீரர்கள் எல்லாம் ரோகித் சர்மாவை மறைமுகமாக உடல் தகுதி குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் ரோகித் சர்மாவின் பேட்டிங் சரிவுக்கு காரணம் அவருடைய உடல் தகுதியாக இருக்கும் என்றும் பலரும் குற்றஞ்சாட்டினர். அடுத்தடுத்து மிகப்பெரிய தொடர்கள் நடைபெறுவதால் ரோகித் சர்மா தனது உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா விடுமுறையில் இருந்தார். அப்போது தனது மனைவி மகளுடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்ற ரோகித் சர்மா உணவு கட்டுப்பாட்டில் தீவிரமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்தும் உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா சுமார் ஐந்து கிலோ வரை எடையை குறைத்து பிட்டாக காட்சியளிக்கிறார்.
மேலும் தாடியையும் ரோகித் சர்மா ட்ரிம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ரோஹித் சர்மா போல் காட்சியளிக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களும் ஆச்சரியமடைந்தனர். ரோகித் சர்மா உடல் தகுதியில் கவனம் செலுத்தி இருப்பதால் அவரால் மீண்டும் பழையபடி பேட்டிங் செய்ய முடியும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு வந்ததற்கு ரோகித் சர்மா தான் முக்கிய காரணம். அந்த தொடரில் அவர் ஐந்து சதங்கள் அடித்து இருந்தார். அதேபோன்ற ஒரு ஆட்டத்தை மீண்டும் ரோகித் சர்மா வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.