மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக சதங்களை விளாசிய வீரர்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். ஆனால் 2023ஆம் ஆண்டு உலகககோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா களமிறங்கவுள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில் 30 சதங்கள், 52 அரைசதங்கள் உட்பட 10 ஆயிரத்து 112 ரன்களை குவித்துள்ளார் ரோகித் சர்மா.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக ரோகித் சர்மா மாறி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் ஓய்வுபெற்ற போது, உங்களின் சாதனைகள் தகர்க்கப்படும் என்று நினைக்கிறீர்களா? அப்படி தகர்க்கப்பட்டால் யாரால் தகர்க்கப்படும்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சச்சின் டெண்டுல்கர், சாதனைகள் படைக்கப்படுவதே தகர்ப்பதற்காக தான். அதனால் நிச்சயம் என் சாதனைகள் தகர்க்கப்படும்.
அந்த சாதனைகளை இந்திய வீரர்கள் தகர்த்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த வகையில் விராட் கோலி அல்லது ரோகித் சர்மா ஆகியோர் என் சாதனைகளை தகர்ப்பார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார். சச்சின் சொல்லியதை போல விராட் கோலி ஒரு பக்கம் சாதனைகளை முறியடித்து வருகிறார். அதேபோல் ரோகித் சர்மாவுக்கு சச்சினின் முக்கியமான சாதனைகளை தகர்க்க வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இதுவரை 6 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 6 சதங்களை விளாசி இருக்கிறார். அதேபோல் 2 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6 சதங்களை விளாசி சாதனையை சமன் செய்துள்ளார். அவருக்கு பின் சங்கக்காரா மற்றும் பாண்டிங் ஆகியோர் 5 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் 9 போட்டிகளில் குறைந்தபட்சம் விளையாட ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த 9 போட்டிகளில் ஒரு சதம் விளாசினாலும், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.