Rohit Sharma: ரோஹித் விளையாட மாட்டார்.. சிக்கலில் மும்பை இந்தியன்ஸ்.. ஓபனிங் இறங்கப் போவது யார்?
மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக அவர் விலகியுள்ளது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நாளை (ஏப்ரல் 16) தனது 5-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியின் போது, ரோஹித் சர்மாவுக்கு தசைநார் கிழிவு காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியில் பெங்களூரு நிர்ணயித்த இலக்கை துரத்திய போது, 6-வது ஓவரிலேயே அவர் காயத்தால் பாதியிலேயே வெளியேறினார். அதன் பிறகு அவர் பீல்டிங் செய்யவும் வரவில்லை. தற்போது அந்தக் காயத்தின் தீவிரம் குறையாததால், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்க மும்பை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மும்பைக்கு பின்னடைவு
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் பின்தங்கியிருக்கும் மும்பை அணிக்கு, ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர் இல்லாதது மிகப்பெரிய இழப்பாகும். இந்தத் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக 78 ரன்கள் குவித்து ரோஹித் அதிரடி காட்டினார். அவர் இல்லாதது அணியின் பேட்டிங் வரிசையை பலவீனமாக்கும் என்று கருதப்படுகிறது.
யார் தொடக்க வீரர்?
ரோஹித் சர்மா இல்லாத நிலையில், தொடக்க வீரராக யார் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தென் ஆப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் குயின்டன் டி காக் அல்லது ரியான் ரிக்கெல்டன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். டி காக்கை ஏலத்தில் 1 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியிருந்தாலும், முதல் 4 போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவை மீண்டும் தொடக்க வீரராக களம் இறக்கவும் வாய்ப்புள்ளது. இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் வில் ஜாக்ஸ் இன்னும் அணியுடன் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் புள்ளிப்பட்டியலில் வலுவான இடத்தில் உள்ளது. இத்தகைய பலமான அணியை, கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி ரோஹித் சர்மா இல்லாமல் எப்படி சமாளிக்கப் போகிறது என்பது பெரும் சவாலாக இருக்கும். ரோஹித்தின் காயம் குறித்த கூடுதல் தகவல்களை மும்பை நிர்வாகம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications