மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா, சக டெஸ்ட் அணி வீரரான புஜாராவின் கிரிக்கெட் வாழ்வைப் பற்றி புஜாராவின் மனைவி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது வெஸ்ட் இண்டீஸில் புஜாரா கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட சம்பவம் குறித்துப் பேசினார். இதுவரை இந்தத் தகவல் எந்தத் தளத்திலும் வெளியே வரவில்லை; ரோகித் சர்மா தான் இதை வெளியிட்டு இருக்கிறார்.
2012 ஆம் ஆண்டு இந்திய 'ஏ' அணி வெஸ்ட் இண்டீஸுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது புஜாரா இரவு நேரத்தில் உணவைத் தேடி வெளியே சென்றிருக்கிறார். இரவு 11 மணி அளவில் அவர் சாலைகளில் சென்று எங்காவது சைவ உணவு கிடைக்குமா எனத் தேடி இருக்கிறார்.

அப்போது ரோகித் சர்மா அவரை எச்சரித்திருக்கிறார். "ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம். இது நமது நாடு அல்ல. வெஸ்ட் இண்டீஸ் அத்தனை பாதுகாப்பாக இருக்காது," என எச்சரித்திருக்கிறார். ஆனால் புஜாரா அதைக் கேட்கவில்லை.
மாறாக, 11 மணி அளவில் டிரினிடாட் - டொபாகோ சாலைகளில் சென்று சில சமூக விரோதிகளிடம் சிக்கி இருக்கிறார். ஆனால், அப்போது என்ன நடந்தது என புஜாரா சொல்ல மறுத்து விட்டார். இந்த விழாவில் இது குறித்து ரோகித் சர்மா மற்றும் புஜாரா பேசிக் கொண்டது இங்கே:
ரோகித் சர்மா, புஜாராவைப் பார்த்து, "இந்த புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என எனக்குத் தெரியவில்லை. 2012 ஆம் ஆண்டு இந்தியா 'ஏ' அணியில் நான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்றது பற்றி இடம் பெற்றுள்ளதா? அங்கு என்ன நடந்தது என எழுதி இருக்கிறீர்களா?" என்று கேட்டார்.
அப்போது புஜாரா அந்த சம்பவத்தைப் பற்றி விவரித்தார்: "நான் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாகச் சொல்லவில்லை. எனது மனைவிக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்தது என முழுமையாகத் தெரியாது. நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன். அப்போது இரவு நேரத்தில் சைவ உணவைத் தேடி வெளியே சென்று இருந்தேன்.
அது டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடு. அங்கு இரவு 11 மணி அளவில் வெளியே சென்றேன். எங்கும் எனக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே, மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது சிலர் என்னைப் பிடித்துக் கொண்டார்கள். அது பற்றி என்னால் முழுமையாகச் சொல்ல முடியாது. ஆனால் அந்த சம்பவத்தைப் பற்றித் தான் நீங்கள் சொல்கிறீர்கள்" என்றார் புஜாரா.
அடுத்து ரோகித் பேசுகையில், "இந்தச் சம்பவத்தின் நீதி என்னவென்றால், மிகவும் பிடிவாதமானவராக இருக்காதீர்கள். நாங்கள் அவரிடம் சொன்னோம், 'ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்ல வேண்டாம். இது வெஸ்ட் இண்டீஸ்,' என்று அவரை எச்சரித்திருந்தோம். அவர் அதைக் கேட்கவில்லை," என்று சொன்னார்.