மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரோஹித் சர்மா தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவில் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். வரவிருக்கும் 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் களமிறங்க உள்ளார். இந்த நீண்ட ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக சற்று ஓய்வெடுக்க முடிவு செய்த அவர் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட பல அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதில் குறிப்பாக, அவர் சட்டையில்லாமல் கடற்கரையில் ஓடும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ரோஹித் சர்மா தனது உடல் எடையின் காரணமாக சமூக வலைதளங்களில் பல விமர்சனங்களையும் உருவக்கேலிகளையும் சந்தித்தார். அந்த விமர்சனங்களுக்கு தனது கடின உழைப்பால் அவர் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். தனது நண்பரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அபிஷேக் நாயரின் பயிற்சியின் கீழ் மிகக் கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்ட ரோஹித் சர்மா, கடந்த 6 மாதங்களில் 10 கிலோவுக்கும் மேல் உடல் எடையை குறைத்து தற்போது நல்ல உடற்தகுதியுடன் மாறியுள்ளார்.

இந்த புதிய உடற்கட்டமைப்புடன் மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் அவர் விஸ்வரூபம் எடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு பிசிசிஐ பல ஒருநாள் தொடர்களை திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளது. மேலும், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்தியா பங்கேற்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ரோஹித் சர்மாவின் இந்த புதிய பிட்னஸ் அவதாரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
