மும்பை: சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பற்றிய மறக்க முடியாத ஒரு கதையை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து ரோகித் சர்மா விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய கலீல் அகமது, "எனது பயணம் நல்ல மற்றும் கெட்ட தருணங்களின் கலவையாக இருந்தது. 2018-19-இல் நான் ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷியின் கீழ் தொடங்கினேன். அவர் எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்தார். நான் அவருக்கு இளையவராக இருந்த போதிலும், என்னிடம் ஏதோ சிறப்பு இருப்பதை அவர் எனக்கு உணர்த்தினார்."

"அவ்வளவு வெற்றிகரமான கிரிக்கெட் வீரர் என்னுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி, என்னை ஊக்குவித்தது, என் நம்பிக்கையை உயர்த்தியது. அந்த வயதில், உங்களிடம் உள்ள திறன்கள் அல்லது உங்களை எப்படி கையாள வேண்டும் என்பது உங்களுக்கு உண்மையில் தெரியாது. அதன் பிறகு ஒரு வருடம் வரை நான் இந்தியாவுக்காக விளையாடினேன்."
"2019-இல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டி எனது கடைசி ஆட்டமாக இருந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகள் காயங்களால் நிரம்பியவை. ரோஹித் ஷர்மா இந்திய கிரிக்கெட்டின் நன்மைக்காக அடுத்த 10 ஆண்டுகளுக்கு விளையாட வேண்டும் என்று நான் உணர்கிறேன்."
"இது எனது தனிப்பட்ட உணர்வு. 2019-இல், வங்கதேசத்துக்கு எதிரான ஒரு தொடரில் ராஜ்கோட்டில் விளையாடியபோது, ஒரு நாள் எனக்கு நல்ல நாளாக அமையவில்லை, நான் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தேன். அப்போது அவர் என்னிடம் வந்து டிரஸ்ஸிங் ரூமில் தனிப்பட்ட முறையில் பேசினார். அணி ஸ்டேடியத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தது, ஆனால் அவர் தங்கி என்னுடன் பேசினார்."
"நான் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினார். எனது திறன்களைப் பற்றி நான் அறியாமல் இருப்பதாக அவர் கூறினார். நாங்கள் ஸ்டேடியத்தை விட்டு வெளியேறும்போது, எல்லா ரசிகர்களும் ரோஹித் என்று கத்திக் கொண்டிருந்தார்கள், அவர் என்னிடம், 'இவை எல்லாம் உனக்கும் நடக்க வேண்டும்' என்று கூறி, நான் அதை விரும்ப வேண்டும் என்றும், நேர்மறையாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்".