மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரின் விளம்பரத் தூதராகச் செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ஒருபுறம் போட்டிகளை ரசித்து வந்தாலும், மறுபுறம் தனது அடுத்த இலக்கான ஐபிஎல் தொடருக்காகத் தயாராகத் தொடங்கியுள்ளார். மும்பையில் அவர் மேற்கொண்ட தீவிர வலைப்பயிற்சி வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டியை ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்தார். இந்நிலையில், மும்பையில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி பார்க் மைதானத்தில் அவர் திடீரென வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். ரோஹித் சர்மா பயிற்சி மேற்கொள்வதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக மைதானத்தில் திரண்டனர்.

அங்கு இளம் வீரர் அங்கிஷ் ரகுவன்ஷியுடன் இணைந்து ரோஹித் சர்மா பல்வேறு ஷாட்களை அடித்து அசத்தினார். டி20 உலகக் கோப்பைத் தொடர் இன்னும் முடிவடையாத நிலையில், ரோஹித் சர்மா ஐபிஎல் 2026 தொடருக்காக முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்கியுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியைக் காணவும் அவர் செல்லவுள்ளார்.
ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் மாதக் கடைசி வாரத்தில் தொடங்கவுள்ளது. இதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில் ரோஹித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சமீபத்திய சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அந்தத் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் சேர்த்து 61 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இருப்பினும், அதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்திய அணி அத்தொடரை இழந்தாலும், ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். குறிப்பாகச் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்துத் தனது பழைய ஃபார்மை நிரூபித்தார்.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். இதனால் ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஜெய்ஸ்வாலை நிரந்தரத் தொடக்க வீரராகக் களமிறக்க வேண்டும் என்ற விவாதங்கள் எழுந்தன.

ஆனால், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வரை விளையாட ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் அடைந்த தோல்வி அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அந்தத் தோல்விக்கு மருந்திடும் விதமாக, மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அவர் விளையாடி வருகிறார்.