மும்பை: 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவின் உடல் மாற்றத்தைக் கண்டு அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானியே வியந்து போன சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சி முகாமுக்குச் சென்ற நீதா அம்பானி, அங்கு வீரர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது பேட்டிங் பயிற்சியாளர் கீரன் பொல்லார்டை 'பாலி காகா' என்று பாசமாக அழைத்த அவர், அருகில் நின்றிருந்த ரோஹித் சர்மாவைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப் போனார். ரோஹித் சர்மா உடல் எடையை வெகுவாகக் குறைத்து மிகவும் மெலிந்து காணப்பட்டதே இதற்குக் காரணம்.
ரோஹித் சர்மாவின் புதிய தோற்றத்தைப் பார்த்த நீதா அம்பானி, "நீ ஒரு சின்னப் பையன் போல இருக்கிறாய். எனக்கு அடையாளமே தெரியவில்லை" என்று ஆச்சரியத்துடன் கூறினார். இதைக் கேட்ட ரோஹித் சர்மா வெட்கத்துடன் புன்னகைத்தார். ரோஹித் சர்மா கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 11 கிலோ எடையைக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 வயதான நிலையிலும், கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த அவர் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு பிறகு ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் 400 ரன்களைக் கடக்க முடியாமல் தடுமாறி வந்தார். ஆனால், கடந்த சீசனில் அவர் 418 ரன்களைக் குவித்து, கடந்த 10 ஆண்டுகளில் தனது சிறந்த பேட்டிங் சாதனையைப் பதிவு செய்தார். தற்போது உடல் எடையைக் குறைத்து இன்னும் உத்வேகத்துடன் இருப்பதால், இந்த சீசனில் அவர் ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்த்தனே, ரோஹித் சர்மாவை இந்த முறையும் 'இம்பாக்ட் பிளேயர்' ஆகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். அணியின் சமநிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படலாம். மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.

ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் புதிதாக அணியில் இணைந்துள்ள தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் எனப் பலமான படையுடன் மும்பை இந்தியன்ஸ் களம் இறங்குகிறது. உடல் எடையைக் குறைத்து புதிய பொலிவுடன் காணப்படும் ரோஹித் சர்மா, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மும்பை அணிக்கு மீண்டும் ஒருமுறை வெற்றிகளைத் தேடித்தருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.