வெ.இண்டீஸ் தொடருக்கு ரோஹித் சர்மா தான் கேப்டன்.. தோனி ஆடுவாரா? இந்திய அணியில் மாற்றம்!
மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில், பிசிசிஐ, இந்தியா விளையாடவுள்ள அடுத்த கிரிக்கெட் தொடருக்கான வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கி உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக வரும் ஆகஸ்ட் 3 முதல் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது இந்திய அணி. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ளன.

விராட் கோலி ஓய்வு
விராட் கோலி தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருவதால் அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலி ஓய்வில் இருக்கும் நிலையில், ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்பார்.

யார் கேப்டன்?
டி20 அணிக்கும், ஒருநாள் போட்டிகள் அணிக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார். டெஸ்ட் தொடரிலும் கோலி ஓய்வு பெறும் பட்சத்தில் அஜின்க்யா ரஹானே டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.

பும்ரா ஓய்வு
விராட் கோலி மட்டுமில்லாமல் உலகின் முன்னணி பந்துவீச்சாளராக வலம் வரும் ஜஸ்ப்ரிட் பும்ராவும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் போது ஓய்வு எடுப்பார் என கூறப்படுகிறது. உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற வேறு சில வீரர்களுக்கும் கூட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம்.

தோனி ஓய்வா?
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் தோனி குறித்தது தான். அவர் உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வு பெற உள்ளார் என நீண்ட காலமாக கூறப்பட்டு வந்த நிலையில், உலகக்கோப்பை தொடரின் முடிவில் தோனி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

தோனி பங்கேற்பாரா?
கேப்டன் கோலி அது குறித்து அவர் யாரிடமும் எதுவும் கூறவில்லை என பேட்டியில் கூறினார். எனவே, தோனி நிலை என்ன என்பது தெரியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனி பங்கேற்பாரா? என்பது முடிவு செய்யப்படாமல் உள்ளது.


Click it and Unblock the Notifications