மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஓராண்டாகவே பேட்டிங்கில் சற்று தடுமாறி வருகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் அவரது ஆட்டம் நிலையாக இல்லை. ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே பெரிய ரன் குவிப்பை வெளிப்படுத்தினார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலும் அவரது பேட்டிங் தடுமாற்றம் தொடர்ந்து வருகிறது.
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, அதில் ஒரு போட்டியில் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை. நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதுவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரது சிறந்த பேட்டிங் செயல்பாடாக உள்ளது.

இந்த ஆட்டத்தில் அவர் சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் வீசிய லோ ஃபுல் டாஸ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பொதுவாக, ஃபுல் டாஸ் பந்துகளை அனுபவ வீரர்கள் எளிதாக அடித்து ஆடுவார்கள். ரோஹித் சர்மா இதுபோன்ற பந்துகளில் பலமுறை சிக்ஸர்களையும் விளாசியிருக்கிறார். ஆனால், இந்தப் போட்டியில் அதைச் சரியாக அடிக்க முடியாமல் கேட்ச் ஆனார்.
இதைக் குறிப்பிட்டு, இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப், ரோஹித் சர்மாவை கடுமையாக விமர்சித்துள்ளார். ரோஹித் சர்மாவின் ஆட்டத்தைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். எப்போதும் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகப் பேசி வரும் முகமது கைஃப், இந்த முறை விமர்சனத்தை முன்வைத்தது கவனிக்கத்தக்கது.
ரோஹித் சர்மாவின் ஆட்டம் பற்றி முகமது கைஃப் பேசுகையில், "எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அவர் இப்போது ஃபுல் டாஸ் பந்தில் ஆட்டமிழந்திருக்கிறார் சகோதரரே, என்ன நடக்கிறது? ரோஹித் ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்தை அடிக்கத் திணறினார், அதன் பிறகு சிக்ஸ் அடித்தார். ரோஹித் தனது கட்டுப்பாட்டில் ஆடுவது போல தெரிந்தது. அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்கமும் அவரிடம் இருந்தது. ஆனால், அவர் தற்போது ஃபார்மில் இல்லை. அதனால்தான் அவர் ஃபுல் டாஸ் பந்தில் ஆட்டமிழந்து இருக்கிறார்" என தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை எடுத்த ஸ்கோர்கள்: 0, 8, 13, 17, 18 மற்றும் 26. மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில்தான் இருக்கிறது என சில விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மிக மோசமான எதிர்வினையை வெளிப்படுத்துவார்கள் என்பதால் தான் அந்த அணி அவரை அணியில் இருந்து நீக்காமல் இருக்கிறது எனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியபோது ரசிகர்கள் மிக மோசமாக எதிர்வினை ஆற்றினார்கள். அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துவிடக்கூடாது என்பதால்தான் ரோஹித் சர்மா சுமாராக பேட்டிங் செய்து வந்தாலும் அவரை அணியில் தக்கவைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எனப் பரவலாகப் பேசப்படுகிறது.