மும்பை: மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், சச்சின் அசத்தல் ஆட்டத்தால் கங்குலியின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியுற்றது.
முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 155 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கெயில் 75 ரன்களை விளாசினார். கங்குலி 31 ரன்கள் எடுத்தார். ஓவைஸ் ஷா 31 ரன்கள் சேர்த்துக் கொடுத்தார்.
பின்னர் ஆட வந்த மும்பை இந்தியன்ஸ் அணியில், கேப்டன் சச்சின் அபாரமாக ஆடினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடிய சச்சின் 48 பந்துகளில் 71 ரன்கள் எடுத்தார்.
தவன் 23 ரன்களை சேர்க்க, திவாரி 30 ரன்கள் குவித்தார். சதீஷ் தன் பங்குக்கு 11 பந்துகளில் 21 ரன்களை விளாச 18.3 ஓவர்களிலேயே 3 விக்கெட்களை மட்டும் இழந்து 156 ரன்களை எட்டி வென்றது மும்பை இந்தியன்ஸ்.
நேற்று சச்சின் எடுத்த 71 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில் அவர் எடுத்த அதிகபட்ச ரன்களாகும்.
சனிக்கிழமைதான் பெங்களூர் அணியிடம் தோற்றிருந்தது மும்பை. அந்தத் தோல்வியிலிருந்து சட்டென்று மீண்டு நேற்று ஸ்டைலாக கொல்கத்தாவை புரட்டிப் போட்டு விட்டது மும்பை இந்தியன்ஸ்.