
47வது பிறந்ததினக் கொண்டாட்டம்
முன்னாள் வீரரும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சச்சின் டெண்டுல்கர், தனது 47வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு சக வீரர்கள், இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியவில்லை என்றாலும், வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் சச்சின்

சச்சின் சர்வதேச சாதனை
கிரிக்கெட் வரலாற்றில் நூறு சதங்களை அடித்துள்ள ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களையும் ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களையும் அடித்துள்ள சச்சின், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். மேலும் ஒரேயொரு சர்வதேச டி20 போட்டியில் விளையாடியுள்ள சச்சின், ஐபிஎல்லின் 6 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர்.

கிரிக்கெட்டில் உத்வேகமாக இருந்தவர்
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் 47வது பிறந்தநாளையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி அவருக்கு தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் மீது தான் கொண்ட காதலின்மூலம் ஏராளமானவர்களுக்கு உத்வேகமாக விளங்கியவர் சச்சின் டெண்டுல்கர் என்று கூறியுள்ள விராட் கோலி, பாஜி இந்த ஆண்டு உங்களுக்கு ஆச்சரியமான ஆண்டாக இருக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

புகைப்படங்கள் பகிர்வு
இந்தியாவிற்காக விளையாடும்போது நேரத்தையே நிறுத்தும் வல்லமை படைத்தவர் சச்சின் டெண்டுல்கர் என்று இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். சச்சினுக்கு தன்னுடைய டிவிட்டர்மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள அவர், சச்சின் இடம்பெற்றுள்ள உலக கோப்பை வெற்றிக்கு முந்தைய, பிந்தைய புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











