வாரணாசி: வாரணாசியில் அமைக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது பிரதமரை சந்தித்த முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், "நமோ" என்று பெயர் கொண்ட ஜெர்சியை பரிசளித்தார்.
உத்தரப் பிரதேச மைதானம் வாரணாசியில் சர்வதேச தரத்திலான புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த மைதானம் அமைக்கப்படுகிறது. இதற்காக 30 ஏக்கர் நிலம் மாநில அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரூ.350 கோடியில் இந்த மைதானம் கட்டுமான பணிகள் நடக்கவுள்ளது.

இந்த கட்டுமான பணிகள் ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காசியின் கலாச்சாரத்தை எதிரொலிக்கும் வகையில் கடவுள் சிவனின் உருவத்தை மாதிரியாக வைத்து இந்த மைதானம் அமைக்கப்படவுள்ளது. சிவனின் தலையில் இருக்கும் பிறைநிலா போல் மேற்கூரைகள், அதற்கு கீழ் ரசிகர்கள் அமர்வதற்கு இருக்கைகள், உடுக்கை வடிவங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மைதானத்தில் மின் விளக்குகள் சிவனின் திரிசூல வடிவமைப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான மாதிரி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காசியில் அமைக்கப்படவுள்ள மைதானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரமதர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து பிரதமரை சந்தித்த முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், "நமோ" என்று பெயர் எழுதிய இந்திய அணியின் உலகக்கோப்பை ஜெர்சியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். இதனை சிரித்த முகத்துடன் பிரதமர் மோடி பெற்று கொண்டார்.
காசியில் அமைக்கப்படவுள்ள மைதானத்தில் 30 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் 7 பிட்ச்கள் அமைக்கப்படும் என்றும், வீரர்களுக்கான பயிற்சி அறைகள், பயிற்சி மைதானங்கள், ஓய்வறைகள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன. மேலும் இந்த மைதானம் 2025ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.