கலிஃபோர்னியா: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். கிரிக்கெட் மட்டுமல்லாமல் பல்வேறு தொழில்களிலும் ரோகித் சர்மா கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 2024ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கிரிக்கெட் தொடர்பான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.
அண்மையில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது கிரிக்கெட் அகாடமியை கலிஃபோர்னியாவில் தொடங்கியுள்ளார். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரோகித் சர்மா கிரிக்கெட் அகாடமியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் "கிரிக் கிங்டம்" என்ற அகாடமியை ரோகித் சர்மா தொடங்கியுள்ளார். இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ரோகித் சர்மாவுக்கு, அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பை அளித்துள்ளனர். அந்த வீடியோ இந்திய ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் ரோகித் சர்மா பேசுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் குரு, ஹீரோ எல்லாமே சச்சின் டெண்டுல்கர் தான். ஒரு மனிதனாகவும், கிரிக்கெட் வீரராகவும் எப்போதும் சச்சின் டெண்டுல்கரை நான் வியந்து பார்க்கிறேன். வாசிம் அக்ரமும், வாக்கர் யூனுஸ் இருவரும் உச்சத்தில் இருந்த போது அவர்களுக்கு எதிராக 16 வயதில் சச்சின் டெண்டுல்கர் அறிமுகமானார். தற்போது உள்ள அளவிற்கு அன்றைய நாட்களில் ஹெல்மெட் கூட இல்லை. அதனால் சிறுவயதிலேயே சச்சின் என் ஹீரோவாக மாறிவிட்டார் என்று கூறினார்.
தொடர்ந்து மும்பை அணி பற்றிய கேள்விக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 11 ஆண்டுகளில் 5 கோப்பைகளை வென்றுள்ளேன். அதனை சிறந்த தருணமாக பார்க்கிறேன். அந்த கோப்பைகளை வென்றதற்கு நான் மட்டுமல்ல, அணி நிர்வாகம், மும்பை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்று அனைவரும் தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அது வரும் ஆண்டுகளில் மாறும் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.