மும்பை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் அர்ஜூன் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளதால், பந்துவீச்சின் போது அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய முக்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணிகளும், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணியில் மோயின் அலி, பென் ஸ்டோக்ஸ் ஆகியர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் மற்றும் ரஹானே ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிசாண்டா மகாளாவுக்கு தோனி வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.

இதே போன்று மும்பை அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இல்லை. எனினும் அவருக்கு காயம் ஏற்படவில்லை. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர் ஸ்டப்ஸ் மும்பை அணியில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணி முதலில் பேட் செய்ய உள்ளதால், இம்பேக்ட் பிளேயர் பட்டியலில் அனைவரையும் பந்துவீச்சாளர்களாக வைத்துள்ளது.
குறிப்பாக ரசிகர்களால் "சின்னவர்" என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் இம்பேக்ட் பிளேயராக சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக கூட அர்ஜூன் டெண்டுல்கர் சேர்க்கப்படவில்லை. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் அவர் இம்பேக்ட் பிளேயராக சேர்க்கப்பட்டுள்ளதால், பந்துவீச்சின் போது அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.