இந்திய இணை குறித்த மதிப்பீடு
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் விமர்சகருமான இயான் சாப்பல், விராட் கோலி-ரோகித் ஷர்மா இணையை சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி இணையுடன் ஒப்பிடுவது அபத்தமானது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிறந்த பௌலர்களுக்கு தட்டுப்பாடு
சச்சின், கங்குலி காலத்தில் சர்வதேச அளவில் ஒவ்வொரு அணியிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ள சாப்பல், அவர்களது பந்துவீச்சை இவர்கள் இருவரும் ஏறக்குறைய 15 ஆண்டுகள் எதிர்கொண்டு சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
எதிரியை கொண்டு மதிப்பீடு
சிறந்த விளையாட்டு வீரரின் திறனானது அவர்களுடைய எதிரிகளின் வலிமையைக் கொண்டே மதிப்பிடப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள சாப்பல், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ் உள்ளிட்ட பௌலர்களின் வலிமையான பந்துவீச்சே சச்சின், கங்குலியின் திறனுக்கு மிகச்சிறந்த சான்று என்று தெரிவித்துள்ளார்.
வலிமையான பௌலர்கள் இல்லை
விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்டவர்கள் மிகச்சிறந்த விளையாட்டை அளித்து வருகின்றனர். கோலி அனைத்து வகை போட்டிகளிலும் 50 சதவிகித சராசரியை வைத்துள்ளார். ஆயினும் தற்போது சர்வதேச அளவில் வலிமையான பௌலிங்கிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இவர்கள் சச்சின், கங்குலியை விட திறன் குறைந்தே காணப்படுகின்றனர் என்றும் கூறினார்.
டி20யில் விளையாடாத கங்குலி
டி20 போட்டிகளில் கோலி, ரோகித் சிறப்பாக விளையாடுவதை சுட்டிக் காட்டிய சாப்பல், ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகக்குறைந்த சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியதாகவும், கங்குலி ஓய்வு பெற்றபின்பே டி20 துவங்கியதையும் குறிப்பிட்டுள்ளார். அதனால் இதில் இவர்களை ஒப்பிடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.