மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடருக்கான இந்திய அணியை தற்காலிக தேர்வு குழு தலைவர் சிவ் சுந்தர் அறிவித்துள்ளார்.
அதன்படி இந்திய அணி வரும் 12ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்ததை கடந்த செய்தியில் பார்த்தோம். அதன்படி இந்திய ஒரு நாள் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று தொடக்க வீரர்கள ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நடுவரிசையில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விக்கெட் கீப்பராக கேரளாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன், இசான் கிஷன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கூடுதல் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா உடன் ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளார். சுழற் பந்துவீச்சாளராக ஜடேஜா, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வேகபந்துவீச்சாளராக ஜெய்தேவ் உனாட்கட், முஹமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
டெஸ்ட் போட்டியை போல் ஒரு நாள் தொடரிலும் முகமது சமிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் ஒருநாள் அணியிலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு டெஸ்ட் போட்டியில் மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக மீண்டும் ஒரு நாள் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கடைசியாக சூர்யகுமார் விளையாடிய 3 ஒரு நாள் போட்டிகளிலும் கோல்டன் டக் ஆனது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட், ஒருநாள் அணிக்கு திரும்பியிருப்பதற்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இல்லாத நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.