
ஜெய்ப்பூர்: 2008ஆம் ஆண்டு, முதல் ஐபிஎல் தொடர் ஆரம்பித்தப்போது யாருமே ராஜஸ்தான் அணியை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எல்லோரும் ஆச்சர்யப்படும் வகையில், அதிக பலம் வாய்ந்த சென்னை அணியை இறுதி போட்டியில் வென்று சரித்திரம் படைத்தப்போதுதான் ஷேன் வார்னேவின் அருமை புரிந்தது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின், நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ஒரு கருத்தில் உடன்படுவார்கள் என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்க மிகச்சிறந்த தலைவர் ஷேன் வார்னே என்பதுதான்.

மார்க் டைலரின் காலத்தில் ஆட ஆரம்பித்த வார்னே, வெகு சீக்கிரமே உச்சம் தொட்டுவிட்டார். டைலரின் காலத்திற்கு பின்பு, ஸ்டீவ் வாஹ் தான் கேப்டன் என முன்னமே தேர்வாளர்கள் தீர்மானித்து விட்டதால், வார்னேவிற்கு ஆஸ்திரேலியாவை வழிநடத்தும் வாய்ப்பு அமையவில்லை.
அதன் பின்பு, ஊக்க மருந்துகள் எடுத்துக்கொண்ட சர்ச்சையில் இரண்டாண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த சமயத்தில் ரிக்கி பாண்டிங்கின் ஆதிக்கத்தில் ஆஸ்திரேலியா உலகமெங்கும் வெற்றிக்கொடி நாட்ட, வார்னேவின் தலைமைப்பண்பை நிரூபிப்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது போல் ஐபிஎல் அமைந்தது.
ஸ்வப்னில் அச்னோத்கர், ரவீந்திர ஜடேஜா, யூசஃப் பதான், ஷேன் வாட்சன் என அன்றைய காலகட்டத்தில் பூரணமாக இளைஞர் பட்டாளத்தை மட்டுமே நம்பி கோப்பையை வென்றபோது உலகமே வியந்தது. மேலும், ரவீந்திர ஜடேஜாவே தன்னுடைய 'ராக் ஸ்டார்' என்று அப்போதே வெளி உலகத்திற்கு சொன்னது மட்டுமல்லாமல், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக வருவார் என்றும் கணித்தார். வார்னே குறிப்பிட்டதைப்போலவே, ஜடேஜா உலகின் நம்பர் 1 டெஸ்ட் பௌலராக உயர்ந்தது மட்டுமல்லாமல், மேக்ஸ்வல் போன்றவர்களே ஜடேஜாவின் ஃபீல்டிங்கிற்கு பயந்து எக்ஸ்ட்ரா ரன் எடுக்க எத்தனிக்க மாட்டேன் என்று பதிவு செய்ததெல்லாம் வார்னேவின் திறமையை கண்டறியும் அறிவுக்கு மகுடம் வைத்ததுப்போல என்றால் மிகையாகாது.
தன்னுடைய தலைமை மற்றும் வெவ்வேறு ஆளுமைகளை வழிநடத்தும் வித்தையை மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக செயல்படுத்த ஷேன் வார்னே இந்த வருட ஐபிஎல் தொடரில் இணைந்தார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டிற்கு ஆஸ்திரேலிய நிர்வாகம் அவர் விளையாட தடை விதித்த காரணத்தினால், ரஹானே ராஜஸ்தானின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
கேப்டன் என்கிற பொறுப்பு வந்தாதாலோ என்னவோ, ரஹானேவால் முந்தைய ஐபிஎல் தொடர்களில் செயல்பட்டதில் பாதி கூட இந்த வருடம் முடியவில்லை. அணியோடு இணைந்த வார்னே, இரண்டு வாரங்கள் ஆஸ்திரேலியா சென்று திரும்புவதற்குள் ராஜஸ்தான் தோல்வி மேல் தோல்விகளைக் கண்டு புள்ளிகளின் பட்டியலில் பாதாளத்திற்கு சென்று விட்டது.
மீண்டும் அணியுடன் இணைந்த வார்னே அதிரடியாக சில விஷயங்களை செய்தார். அதில் முதன்மையானது, இங்கிலாந்தின் அதிரடி விக்கட் கீப்பர் ஜோஸ் பட்லரை துவக்க வீரராக களமிறக்கியது. இதுவரை பட்லரை இங்கிலாந்து தோனியைப் போன்று ஒரு ஃபினிஷராக மட்டுமே பார்த்ததால், முதல் ஏழு ஆட்டங்களில் பின்கள வீரராகவே செயல் பட்டு வந்தார். வார்னேவின் இந்த அதிரடித் திட்டத்திற்கு கை மேல் பலன் கிடைத்தது. பட்லரின் சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பி இன்று 12 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தன வசமாக்கியுள்ளது.
ஜோஸ் பட்லர், கெளதம், ஆர்ச்சர் என பன்முகத்தன்மை கொண்ட வீரர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று வார்னே ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளுக்கும் பாடமெடுத்து வருகிறார். இந்த தொடரில் ராஜஸ்தான் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து இறுதி வரை முன்னேறினால் அதற்கு பக்கபலமாக இருக்கப்போவது அவ்வணியின் முதல் கேப்டன் வார்னே தான்.