மொஹாலி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மூன்று போட்டிகளாக குறைந்தபட்ச ஸ்கோரை அடிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் மும்பை அணி ரசிகர்களுக்கு ரன் விருந்து படைத்தது.
பஞ்சாப் மும்பை மோதிய ஆட்டத்தில் மொத்தமாக 430 ரன்கள் குவிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 216 ரன்கள் அடித்த நிலையில் இதனை சேசிங் செய்த மும்பை அணி ஏழு பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றியை ருசித்தது.

இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான், இன்றைய ஆட்டத்தில் நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். முதல் இன்னிங்ஸ் முடிவில் எங்களுடைய அணி வீரர்கள் நல்ல இலக்கை எதிரணிக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களால் இந்த இலக்கை தற்காத்துக் கொள்ள முடியவில்லை.
எங்கள் அணி வீரர்கள் நன்றாகவே பந்து வீசினார்கள். ரிஷி ஒரு முனையில் நன்றாக வீசினார். ஆனால் அவருக்கு மறுமுனையில் இருந்து பந்து வீசிய வீரர்கள் அதிக ரன்களை வாரி கொடுத்தார்கள். ஆப் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் அதனை எளிதாக ரன்களாக மாற்றுவார்கள். பவர்பிளேவில் நாங்கள் இன்னும் கொஞ்சம் பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும்.

இசான் கிஷனும், சூரியகுமார் யாதவும் ஆட்டத்தை எங்களிடம் இருந்து கவர்ந்து சென்று விட்டார்கள். நாங்கள் பந்து வீச்சில் கொஞ்சம் நெருக்கடி அளிக்கும் வகையில் செயல்பட்டு இருக்க வேண்டும். நிச்சயமாக இது ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம் தான். இதனால் பந்தின் வேகத்தை குறைத்து வீசவேண்டும் என நினைத்தேன்.
நாதன் எலிஸ் அதனை சிறப்பாக செய்தார். ஆனால் மற்ற பந்துவீச்சாளர்கள் இன்று தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. மேலும் ஆடுகளத்தில் பனிப்பொழிவும் இருந்தது. இதனால் பேட்டிங்கிற்கு மேலும் சாதகமாக கள சூழல் மாறியது. அணியில் இருக்கும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் ரன்களை வாரிக் கொடுத்தால், பிறகு அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகும் என்று ஷிகர் தவான் கூறினார்.