லாகூர்: இந்திய அணிக்கு கோலியே கேப்டனாக நீடிக்க வேண்டும் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
உலக கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவியது. அதே நேரம் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் கோலி கேப்டனாக தொடர்வார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டுக்கும், கோலியே கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மாற்றம் ஏற்படும் பலரும் இது குறித்து பல கருத்துகளை கூறி வருகின்றனர்.
முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உட்பட பலரும் இதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதற்கிடையில், முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி தொடர்வதே சரி என்று தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணி கேப்டன் பொறுப்புக்கு கோலி தான் சரி. ரோகித் சவாலான பொறுப்புக்களை சுமக்க சரியான ஆள் தான். அதை உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்து நிரூபித்தார். ஆனால் தற்போது மாற்றத்துக்கு அவசியம் ஏற்படும் நிலை இல்லை என்றார்.