சச்சின் விக்கெட்.. காலி செய்த அக்தர்.. கொண்டாடிய கொல்கத்தா - கிரிக்கெட்டின் 'விசித்திர' தருணம்
மும்பை: சச்சினை இந்தியாவில் ஒருவர் அவுட் செய்து, அதற்கு இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்து நீங்கள் பார்த்து இருக்கீங்களா? இருக்கு. அப்படியொரு சம்பவம் இருக்கு.
இந்த ஐபிஎல் என்பதே ஒரு மாய வித்தை தாங்க. மேஜிக் சூழ் உலகம். உள்ள என்ன நடக்குது என்பதே வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. ஆனால், அது கொடுப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சுவாரஸ்யம்.
அதுக்கு தான் நம்மாளுங்க எல்லாம் ஐபிஎல்-லை விழுந்து விழுந்து பார்க்குறாங்க. இத்தனை நாட்கள் ஒன்றாக அணியில் இணைந்து விளையாடியவர்கள் அடுத்த மாதமே எதிரும் புதிருமாய் மல்லுக்கட்டினால் சுவாரஸ்யமா தானே இருக்கும். அது தான் ஐபிஎல்-லின் வெற்றி சீக்ரெட்.

தேன் வந்து பாயுது
அப்படி ஒரு சுவாரஸ்யமான, யாரும் எதிர்பார்க்காத, யாரும் கற்பனை கூட செய்து பார்க்காத தருணங்களை ஐபிஎல் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. அப்படியொரு தருணம் இது. மே 16, 2008. அதில் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. ஸ்டேடியத்தில் ஒரு கொசு நுழையக் கூட இடமில்லை. அவ்வளவு ரசிகர்கள் கூட்டம். இதற்கு முக்கிய காரணம், கங்குலி அணியில் இடம் பெற்றிருந்த சோயப் அக்தர். எதிரணி தலைவர் சச்சின். அக்தர் கேப்டன் கங்குலி. கேட்கவே 'தேன் வந்து பாயுது காதினிலேயே' மாதிரி இருக்குல்ல. அதனால் இப்போட்டிக்கான எக்ஸ்பெக்டேஷன் வேற லெவலில் இருந்தது.

உள்ளூர் தாதா
ஒருபக்கம் 'தாதா'வுக்கு ஆதரவாக வெறியர்களும், இன்னொரு பக்கம் 'உள்ளூர்' தாதாவான சச்சினின் ரசிகர்களும் என்று அரங்கமே அதிர்ந்தது. இதில், முதலில் ஆடிய கொல்கத்தா வெறும் 67 ரன்களுக்கு சரண்டரானாது. உச்சக்கட்ட கொண்டாட்ட மனநிலையில் இருந்த கொல்கத்தா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது இந்த போட்டி. அதிகபட்சமாக கங்குலியும், அகர்கரும் தலா 15 ரன்கள் எடுத்தனர்.

கொண்டாடிய ரசிகர்கள்
பிறகு, களமிறங்கிய மும்பை அணியில், சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவர் அக்தர். இதில், ஓவரின் ஐந்தாவது பந்தில் எட்ஜ் ஆன சச்சின், விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுக்க, கூட்டம் ஆர்ப்பரித்தது. 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் சச்சின் விக்கெட்டுக்கு இந்தியாவில் கொண்டாட்டங்கள் களைக்கட்டிய ஒரே தருணம் இதுதான். சச்சின் தலையை தொங்கப்போட்டு நடக்க ஆரம்பிக்க, அக்தரும் கங்குலியும் மகிழ்ச்சியில் கட்டித் தழுவ, ரசிகர்கள் சப்தம் விண்ணைப் பிளக்க வெளியேறினார் மாஸ்டர் பிளாஸ்டர் 'சச்சின்'

விசித்திர தருணம்
87 பந்துகள் மிச்சமிருக்க, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது மும்பை இந்தியன்ஸ். ஆனால், அந்த போட்டியை எந்த ரசிகனாலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. இந்தியா vs பாகிஸ்தான் என்றாலே ஆக்ரோஷமும், மோதலும் இருந்த நிலையில், பாகிஸ்தான் பவுலர் ஒருவர், இந்தியாவின் கிரிக்கெட் நாயகனை, இந்தியாவிலேயே அவுட் செய்ய, அதற்கு இந்திய ரசிகர்களும் கொண்டாடிய அந்த விசித்திர தருணம் ஐபிஎல் எனும் புத்தகத்தில் எப்போதும் முதல் பக்கத்தில் இருக்கும்.


Click it and Unblock the Notifications