கலிஃபோர்னியா: இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரோகித் சர்மா அளித்துள்ள பதில் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த உலகக்கோப்பைத் தொடரின் போது கடைசி வரை நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதில் இந்திய அணி நிர்வாகம் குழப்பத்திலேயே இருந்தது. கடைசி வரை வெவ்வேறு வீரர்களை பரிசோதித்து யாரையும் முடிவு செய்யாமல், விஜய் சங்கரை அழைத்து சென்றது. இதன்பின் அந்த உலகக்கோப்பையிலேயே 4வது வரிசையில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களையும் இந்திய அணி களமிறக்கியது. இதன் விளைவாக அரையிறுதியில் தோல்வியை சந்தித்தது.

அதன் பின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி ரசிகர்கள், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்றார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்களில் மிடில் ஓவர்களிலும் ஸ்பின்னரை வெளுத்து வாங்கக் கூடிய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தான். இதன் மூலம் இந்திய ஒருநாள் அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேனாக நிலை நிறுத்திக் கொண்டார். ஆனால் மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார்.
அதன்பின் ஐபிஎல் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கூட ஸ்ரேயாஸ் ஐயரால் இந்திய அணிக்கு திரும்பவில்லை. இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஆசியக் கோப்பைத் தொடரிலாவது கம்பேக் கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அண்மையில் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதும் சிக்கல் என்று தகவல் வெளியாகியது. இதனால் உலகக்கோப்பைத் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியுமா என்ற ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த கேள்வி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடமே கேட்கப்பட்டது. கலிஃபோர்னியாவில் தனது கிரிக்கெட் அகாடமி தொடக்க விழாவிற்காக சென்ற ரோகித் சர்மாவிடம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். இன்னும் முழுமையான ஃபிட்னஸை எட்டவில்லை. அதற்கான முயற்சியில் இருக்கிறார். அதனால் உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பது குறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் வாய்ப்பு வழங்குவது ஏன் என்பது தெளிவாகியுள்ளது. ஒருவேளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயரால் பங்கேற்க முடியவில்லை என்றால், சூர்யகுமார் மற்றும் சாம்சனை வைத்து உலகக்கோப்பை எதிர்கொள்வதே இந்திய அணியின் திட்டமாக உள்ளது ரசிகர்களுக்கு தெளிவாகிறது.