டர்பன்: ஐபிஎல் டுவென்டி-20 போட்டியின் நேற்றைய முதல் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை வென்றது. மற்றொரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வெற்றியை பறிகொடுத்தது.ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது.டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பெங்களூர் கேப்டன் பீட்டர்சன் சற்று வித்தியாசமான முடிவை எடுத்தார். முதல் ஓவரை தானே வீச முடிவு செய்தார். இதற்கு சூப்பர் பலன் கிடைத்தது. அதிரடி வீரர் மெக்கலம் முதல் பந்திலே கோல்டன் டக் ஆனார்.அடுத்து வந்த ஹாட்ஜ் 17, கங்குலி 1 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். பொறுப்புடன் விளையாடிய கெய்ல் 40, வான் வைக் 43 ரன்கள் எடுக்க கொல்கத்தா அணி 100 ரன்களை தாண்டியது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணிக்கு காலிஸ், கோஸ்வாமி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 69 ரன்கள் எடுத்த நிலையில் கோஸ்வாமி 43 ரன்களுக்கு அவுட்டானார். காலிஸ் 23 ரன்களுக்கு இஷாந்த் சர்மா வேகத்தில் வெளியேறினார்.அடுத்த வந்த வீரர்கள் ஓரளவு மட்டுமே ரன் சேர்த்தனர். பீட்டர்சன் 13, கோஹ்லி 19 ரன்களுக்கு அவுட்டாயினர். இருந்தாலும் பெரிய இலக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. பவுச்சர் 13 பந்தில் 25 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் திரில் வெற்றி...மற்றொரு போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, யுவராஜின் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு சங்ககரா மட்டுமே ஓரளவு ரன்கள் சேர்த்தார். அவர் 1 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 44 பந்தில் 45 ரன்கள் எடுத்தார்.மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. யுவராஜ் 10, ஜெயவர்ததனே 7 ரன்களுக்கு அவுட்டானார்கள். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இவர்களை விட மோசமாக பேட் செய்தது. கேப்டன் சச்சின் 1 ரன்னுக்கும், அதிரடி மன்னன் ஜெயசூர்யா ரன் எடுக்காமலும் அவுட்டானார்கள். டுமினி மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். ஆனால் இவருக்கு மற்ற வீரர்கள் துணை நிற்கவில்லை. இந்நிலையில் கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலை ஏற்பட்டது. முதல் ஐந்து பந்தில் மும்பை இந்தியன்ஸ் 7 ரன்கள் எடுத்தது.கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி, பவுண்டரி அடித்தால் டை என்ற பரபரப்பான நிலை ஏற்பட்டது. பந்தை அப்துல்லா வீசினார். அதை திவாரி இழுத்தடித்தார். ஆனால் பந்து பீல்டர் கையில் தஞ்சம் புக, 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.