டர்பன்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய பரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.ஐபிஎல் டுவென்டி-20 தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்து முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை எதிர் கொண்டது. டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.சென்னை அணிக்கு துவக்க வீரராக வந்த முரளி விஜய் நேற்றும் சொதப்பினார். அவர் 9 பந்தில் 5 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த ரெய்னா 13 ரன்களுக்கும், டோணி 18 ரன்களுக்கும் அவுட்டானார்கள். ஹைடன் மட்டும் தொடர்ந்து அதிரடியாக பேட் செய்தார். இதையடுத்து சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்து கொண்டிருந்தது. எப்படியும் குறைந்தது 160 ரன்களாவது எடுப்பார்கள் என நினைத்த நிலையில் அரைசதம் கடந்த ஹைடன் அவுட்டானார். அவர் 38 பந்தில் 3 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 60 ரன்கள் எடுத்தார்.அடுத்து வந்த சென்னை வீரர்கள் தங்களுக்கும் போட்டிக்கும் சம்பந்தமில்லை என்பது போல் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதனால் சென்னை அணி கடைசி 7 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு வெறும் 129 ரன்கள் எடுத்தது.எளிய இலக்கை சேஸ் செய்த பெங்களூர் துவக்கத்தில் திணறியது. உத்தப்பா (6), காலிஸ் (0), டிராவிட் (8) ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்கள்.அடுத்து களமிறங்கிய விராத் கோஹ்லி, ரோஸ் டெய்லருடன் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். கோஹ்லி 35 பந்தில் 38 ரன்கள் எடுத்து, பாலாஜி பந்தில் அவுட்டானார். இதை தொடர்ந்து பெங்களுர் அணி வரிசையாக மேலும் மூன்று விக்கெட்டை இழந்தது.இந்நிலையில் பெங்களூர் அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலை உருவானது. ஓரம் வீசிய முதல் பந்தில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த ரோஸ் டெய்லர் 46 ரன்களுக்கு அவுட்டானார். இதையடுத்து 2 விக்கெட் எடுத்தால் சென்னை வெற்றிபெறும் என்ற சூழ்நிலை உருவானது. ஆனால், பெங்களூர் அணியின் வினய் குமார் சிறப்பாக பேட் செய்து, தனது அணிக்கு வெற்றி தேடி தந்தார். பெங்களூர் 19.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.சச்சின் ஆட்டம் வீணானது...மற்றொரு போட்டியில் சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது.ராஜஸ்தான் அணிக்கு குயினே 51 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார். ரவிந்திர ஜடேஜா 32 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 19, யூசுப் பதான் 17 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.அடுத்து பேட் செய்த மும்பை அணிக்கு பிரோவா 1, டகவாலே 18, ரகானே 3 மோசமான துவக்கம் தந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்ப்டட அதிரடி மன்னன் ஜெயசூர்யா 16, டுமினி 4 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த அபிஷேக் நாயர், சச்சினுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார்.சூப்பராக பேட் செய்த சச்சின் 1 சிக்சர், 4 பவுண்டரி உட்பட 30 பந்தில் 40 ரன்கள் எடுத்து, வார்ன் பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானார். அபிஷேக் 18 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு கடைசி 9 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து மும்பை வெல்லும் என எதிர்பார்க்கப்ப்டடது.இந்நிலையில் அபிஷேக் பெவிலியன் திரும்ப, ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறி போனது. அடுத்து வந்த மும்பை அணி 3 ரன்கள் எடுப்பதற்குள் மீதமிருந்த மூன்று விக்கெட்டையும் இழந்தது. இறுதியில் மும்பை 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.