டர்பன்: மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் டுவென்டி-20 போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து 3வது போட்டியில் அது வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.ஐபிஎல் தொடர் தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி, சச்சினை கேப்டனாக கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதிரடியாக விளையாடிய கில்கிறிஸ்ட் 3 சிக்சர், 3 பவுண்டரி உட்பட 20 பந்தில் 35 ரன்கள் எடுத்தார். மூன்றாவது வீரராக வந்த டேவோன் ஸ்மித் 35 ரன்கள் எடுத்தார்.மறுமுனையில் சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்திய கிப்ஸ் 44 பந்தில் 58 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட்டானார். அடுத்த வந்த வீரர்கள் விரைவில் வெளியேறினர். டெக்கான் சார்ஜர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு ஜெயசூர்யா 1 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் அடு்த்து வந்த டுமினி, சச்சினுடன் இணைந்து அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்து, அசத்தியது. டெக்கான் சார்ஜர்ஸ் பந்துவீச்சை விளாசிய சச்சின் 27 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஓஜா பந்தில் அவுட்டானார். இவரை தொடர்ந்து 40 பந்தில் 47 ரன்கள் எடுத்தநிலையில் டுமினியும் ஓஜா சுழலில் வெளியேறினார். அடுத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆளுக்கு ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.