
ஒரு அணியாக
மிட்சல் ஜான்சன், லசித் மலிங்கா, ஹர்பஜன் சிங், திணேஷ் கார்த்திக், வேயன் ஸ்மித், ரோஹித் சர்மா, கீரன் போலார்ட் ஆகியோர்தான் மும்பை அணியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணம். இவர்கள் ஒரு அணியாக, கூட்டாக தொடர் முழுவதும் பிரமாதமாக ஆடி வந்தனர்.

ஹர்பஜன் சிங்கின் மறு பிறவி...
ஹர்பஜன் சிங் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். இந்திய அணியில் அவருக்கு இடமில்லாவிட்டாலும் கூட மும்பை அணியின் தூணாக விளங்கினார். 24 விக்கெட்களை அவர் அள்ளினார்.

மிட்சல் ஜான்சனின் வருகை...
ஹர்பஜன் சிங்கைப் போலவே ஆஸ்திரேலிய அணியில் இடமில்லாமல் நீக்கப்பட்டவர் ஜான்சன். ஆனால் ஐபிஎல் போட்டி அவருக்கு புதுப் பிறவியைக் கொடுத்துள்ளது. இவரும் 24 விக்கெட்களை நீக்கினார். எதிரணியினர் மத்தியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியவர்.

சச்சின் - ரிக்கியின் பிரிவு
ஆரம்பத்தில் சச்சினும், ரிக்கி பான்டிங்கும் இணைந்து ஓப்பனிங் செய்தனர். பார்க்கவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால் ரன் வரவில்லை. நாங்கள் செட் ஆகவில்லை என்று பான்டிங் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டார். இளைஞர்களுக்கு வழி விட்டு விலகினார். சச்சினும் அப்படியே ஓரம் கட்டிக் கொண்டார். இது மும்பைக்கு பேருதவியாக இருந்தது.

சூப்பர்ப் கேப்டன் ரோஹித்
மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் அபாரமாக இருந்தது. நல்ல பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் அவர் ஜொலித்தார். 538 ரன்களைக் குவித்தார். இறுதிப் போட்டியில் மலிங்காவை முதலில் பவுலிங் செய்ய வைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்ததை அனைவரும் பார்த்தனர்.

வாங்கடே கோட்டை...
மும்பை அணியின் வாங்கடே ஸ்டேடியம் அதன் கோட்டையாக மாறியது. அங்கு நடந்த அத்தனை போட்டிகளிலும் மும்பையே வென்றது. இதுவும் அந்த அணியின் வெற்றி அணிவகுப்புக்கு முக்கியக் காரணம்.

கும்ப்ளே, ராபின் சிங், ஜான் ரைட், பான்டிங்
அனில் கும்ப்ளே, ராபின் சிங், ஜான் ரைட், ரிக்கி பான்டிங், ஜான்டி ரோட்ஸ் ஆகியோரின் சப்போர்ட் அணிக்கு பெரும் பலமாக இருந்தது. குறிப்பாக ரிக்கி மிகவும் ஆர்வமாக மு்ம்பை அணியினருக்கு நிறைய டிப்ஸ் கொடுத்து ஊக்குவித்தபடி இருந்தார்.

அடித்து நொறுக்கிய நால்வர்
மும்பை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமானவர்கள் என்றால் அது நிச்சயம் ஸ்மித், போலார்ட், திணேஷ் கார்த்திக் மற்றும் ரோஹித் சர்ம்தான். இந்த நால்வரும் சேர்ந்து அதகளம் செய்து விட்டனர். ரோஹித் 538 ரன்களையும், திணேஷ் கார்த்திக் 510 ரன்களையும் குவித்தனர். போலர்ட் பங்கு 420 ஆகும். வேயன் ஸ்மித் 418 ரன்களைக் குவித்தார். ஆரம்பப் போட்டிகளில் மும்பை வெல்ல திணேஷ் கார்த்திக்கின் சரமாரி ஆட்டம்தான் காரணம்.

ரசிகர்களின் பேராதரவு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மும்பை ரசிகர்களைத் தவிர மற்ற ஊர்களிலும் பேராதரவு காணப்பட்டது என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக கொல்கத்தாவில் நடந்த இறுதிப் போட்டியிலும் கூட மும்பைக்குத்தான் அதிகஅளவிலான ரசிகர்கள் காணப்பட்டனர்.

அப்புறம்....சச்சின்
சச்சின் டெண்டுல்கர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால் அந்த இடமே உற்சாகமாகி விடும். வீரர்களுக்கு குஷி பிறந்து விடும். அதேபோலத்தான் மும்பைக்கும். சச்சினை அணியின் முதுகெலும்பு என்று அம்பட்டி ராயுடு வர்ணித்தார். இந்தத் தொடரில் 200க்கும் மேற்பட்ட ரன்களைச் சேர்த்த சச்சின் பின்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால் அணியினரோடு இருந்து வீரர்களை வழிநடத்தினார்.
இப்படி நிறைய காரணங்கள்.. .மும்பை வெல்ல!


Click it and Unblock the Notifications











