நாட்டிங்ஹாம்: இந்திய அணி டுவென்ட-20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறியதற்கு வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியது தான் காரணம். அதனால் அவர்கள் சோர்ந்துவிட்டனர் என அணியின் பயிற்சியாளற் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.
டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி கோப்பை கனவை இழந்தது. சூப்பர்-8 பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோற்று பரிதாபமாக வெளியேறியது.
தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் கூறுகையில்,
இந்திய வீரர்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடி வருகின்றனர். அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றதனால் களைத்துவிட்டனர். இந்த சோர்வு காரணமாக தான் இந்திய அணி கோப்பை வெல்ல முடியாமல் போய்விட்டது.
இந்திய வீரர்கள் நியூசிலாந்து தொடரில் விளையாடியதை போல் புத்துணர்ச்சியுடன் விளையாடவில்லை. பல வீரர்களுக்கு இத்தொடரில் காயம் ஏற்பட்டது. சிலர் ஐபிஎல் தொடரில் காயமடைந்தனர். அவர்கள் தற்போது அணியில் இடம்பெற முடியாமல் போய்விட்டது என்றார் கிறிஸ்டன்.
கிறிஸ்டனின் இந்தக் கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒரு அணியாக விளையாடவில்லை-டோணி...
ஆனால், கேப்டன் டோணி பயிற்சியாளரின் இந்த விளக்கத்தை ஏற்று கொள்ள மறுத்துவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,
போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் 100 சதவீத உடல்தகுதியுடன் தான் இருந்தார்கள் என சொல்ல முடியாது. சிலருக்கு முழங்காலிலும், தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டிருந்தது. தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பம் காரணமாக விரைவில் 100 சதவீதம் உடல்நலனை பெற்றுவிடலாம்.
அதே சமயத்தில் சோர்வு காரணமாக தான் தோற்றோம் என்பதை ஏற்று கொள்ள முடியாது. எனக்கு எப்போதும் சோர்வு ஏற்படவில்லை. எனக்கு ஓய்வு தேவை என நினைத்ததால் தான் இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை. அது போல் தற்போது எனக்கு எதுவும் தேவைப்படவில்லை. சேர்வுக்கான அறிகுறிகள் கூட எனக்கு தென்படவில்லை.
இத்தொடரில் நாங்கள் ஒரு அணியாக செயல்படாதது தான் தோல்விக்கு காரணம் என நினைக்கிறேன். வழக்கமாக அணியில் குறைந்தபட்சம் 80 சதவீதம் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் இம்முறை வீரர்கள் 60 சதவீதம் கூட இணைந்து விளையாடவில்லை.
என்னையும் சேர்த்து முக்கிய வீரர்கள் பார்மில்லாமல் தவித்தது ஒரு காரணம். பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை கொண்டதாக கருதப்பட்ட நமது அணி பேட்டிங்கில் சோடை போனது. சிலர் சிறப்பான விளையாடினார்கள். சிலர் சொதப்பிவிட்டனர்.
முக்கியமான தொடர்களுக்கு முன்னால் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என கிறிஸ்டன் தெரிவித்துள்ளார். வீரர்கள் விரும்பினார் இதில் தப்பில்லை. அவர்களது முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்றார் டோணி.