ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 278 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணி தரப்பில் மயங்க் அகர்வால் - டிராவிஸ் ஹெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் 17 வயதேயான மபாகா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து சிறப்பாக தொடங்கினார்.

பின்னர் ஹர்திக் பாண்டியா வீசிய 2வது ஓவரில் 11 ரன்கள் விளாசப்பட, மீண்டும் மகாபா வீசிய 3வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. இதன்பின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 11 ரன்களில் ஆட்டமிழக்க, அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் கூட்டணி இணைந்து மும்பை அணி தெறித்து ஓடவிட்டது. கோட்ஸி வீசிய 6வது ஓவரில் மட்டும் இருவரும் இணைந்து 23 ரன்களை விளாசினர். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 81 ரன்களை குவித்தது.
பின்னர் அட்டாக்கில் வந்த பியூஷ் சாவ்லா பந்தில் அபிஷேக் சர்மா 3 சிக்சர்களை விளாச, மறுபக்கம் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 7 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 100 ரன்களை கடந்தது. இதன்பின் கோட்ஸி ஓவரில் டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மார்க்ரம் களமிறங்கி ஆடிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். இதன்பின் மபாகா வீசிய 10வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது.
இதன் மூலமாக இளம் வீரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்தார். 10 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களாக உயர்ந்தது. இதன்பின் சாவ்லா வீசிய ஓவரில் சிக்சர் அடிக்க முயன்று அபிஷேக் சர்மா 23 பந்துகளில் 63 ரன்களில் ஆட்டமிழக்க, மார்க்ரம் - கிளாசன் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றனர். 15 ஓவர்கள் முடிவிலேயே ஐதராபாத் அணி 200 ரன்களை கடந்தது.
இதன்பின் கிளாசனின் ருத்ரதாண்டவம் தொடங்கியது. ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தபட்சம் 12 ரன்களை விளாச, கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 19 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச ஸ்பின்னரான முலானி அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்களை குவித்தது.
சிறப்பாக விளையாடிய கிளாசன் 34 பந்துகளில் 7 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 80 ரன்களை விளாசினார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணியால் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி தரப்பில் 263 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. தற்போது ஆர்சிபி அணியின் சாதனையை ஐதராபாத் அணி முறியடித்து சாதனை படைத்துள்ளது.