மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது தான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ரோகித் சர்மா தன்னுடைய இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் இருக்கிறார்.
இதன் காரணமாக இந்திய அணிக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கு புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. ஒரு நாள் கேப்டன் பதவிக்கு ஹர்திக் பாண்டியாவும், டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பும்ரா அல்லது விராட் கோலியும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், தம்மை பொறுத்தவரை பும்ரா தான் அடுத்த கேப்டனாக இந்தியா அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பும்ரா ஒரு தலைவன் போல் அணியை முன் நின்று வழி நடத்துகிறார்.
பும்ராவிடம் நல்ல குணங்கள் இருக்கிறது. ஒரு தலைவனுக்குரிய திறன் இருக்கிறது. பும்ரா மற்ற வீரர்கள் மீது நெருக்கடியை போட மாட்டார். சில சமயம் கேப்டன்கள் ஏதேனும் ஒரு வீரர் மீது அதிக அழுத்தத்தை போடுவார்கள். ஆனால் பும்ரா விஷயத்தில் அவர் அப்படி செய்ய மாட்டார். அணியில் இருக்கும் வீரர்கள் என்ன செய்ய வேண்டும்? எதற்காக அணியில் இருக்கிறீர்கள் என்பதை வீரர்களுக்கு பும்ரா புரிய வைப்பார்.

இதேபோன்று மற்ற வேகப்பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போது இவர் அவர்களுக்கு அருகே மிட் ஆன் அல்லது மிட் ஆஃப் பகுதியில் நிற்கிறார். இதன் மூலம் ஒவ்வொரு முறையும் எப்படி பந்து வீச வேண்டும் என்று மற்ற பவுலர்களுக்கு அறிவுரை வழங்கி வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
எனவே பும்ரா விரைவில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் நான் அதை பார்த்து ஆச்சரியப்பட போவதில்லை. சிட்னி டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடி இருந்தால், ஒரு வேளை இந்திய அணி வெற்றி கூட பெற்று இருக்கலாம். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது இந்திய பவுலர்கள் பெரிய அளவு நெருக்கடியை ஏற்படுத்த முடியவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ் போலாண்டும் தங்களுக்குள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக செயல்பட்டார்கள். இதேபோன்று இந்திய அணியில் பும்ரா இருந்திருந்தால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைத்திருக்கும். இதன் மூலம் போட்டி எப்படி வேண்டுமானாலும் முடிந்து இருக்கலாம் என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.