ஐதராபாத்: 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலத்திற்கு முன் ஐதராபாத் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி துபாய் கோகோ கோலா வளாகத்தில் நடக்கவுள்ளது. இதற்கான பணிகளில் ஐபிஎல் நிர்வாக குழு மேற்கொண்டு வரும் நிலையில், ஒவ்வொரு அணிகளும் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மற்றும் விடுவிக்கும் வீரர்கள் பட்டியலை நவ.26 (இன்று) தேதிக்குள் வெளியிட அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் ஒவ்வொரு அணிகளும் டிரேடிங் முறையில் வீரர்கள் ஒப்பந்தம் செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்கள் யார் என்ற பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஹாரி ப்ரூக் ரூ.13.25 கோடிக்கு வாங்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அதிக தொகைக்கு ஏலம் போன இளம் வீரராகவும் அறியப்பட்டார். ஆனால் கடந்த சீசனில் ஒரேயொரு சதம் மட்டுமே விளாசிய அவர், வேறு எந்த போட்டியிலும் சிறப்பாக செயல்படவில்லை.
இதனால் ஐதராபாத் அணி ஹாரி ப்ரூக்கை விடுவித்துள்ளது. அதேபோல் இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட கார்த்தி தியாகி ரூ.4 கோடி கொடுத்து வாங்கப்பட்ட நிலையில், அவரையும் ஐதராபாத் அணி நிர்வாகம் விடுவித்துள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் இளம் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன், இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆடில் ரஷீத், இந்திய இளம் வீரர்களான சமர்த் வியாஸ் மற்றும் விவ்ராந்த் சர்மா ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மயங்க் அகர்வால், மார்கோ யான்சன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்ட நிலையில், ஐதராபாத் அணி அவர்களை தக்க வைத்துள்ளது. அதேபோல் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் இருவரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஐதராபாத் அணியிடம் ரூ.20 கோடிக்கும் அதிகமான கையிருப்புடன் மினி ஏலத்தில் களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் பெரிய வீரர்கள் ஒருவரை ஐதராபாத் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.