ஹைதராபாத்: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் குஜராத் லயன்ஸ் அணிகளும் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் லயன்ஸ் 20 ஓவர் முடிவில் 135 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்ட டேவில் வார்னர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து குஜராத் லயன்ஸ் பேட்டிங் செய்தது.
நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய அந்த அணி 9 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 4.5 ஓவரில் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரான மெக்கல்லம் 5 ரன்கள் எடுத்திருந்த போது, சன்ரைசர்ஸின் ரஷித் கான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.
இதைத்தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே புவனேஷ்குமார் பவுலிங்கில் தவானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார் ராய். அவர் 31 ரன்கள் எடுத்திருந்தார். 6.2 ஓவரில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து அதே ரஷித் கானிடம் எல்பிடபிள்யூ ஆனார் குஜராத் லயன்ஸின் பின்ச்.
9வது ஓவர் முடிவில் குஜராத் லயன்ஸ் கேப்டனான சுரேஷ் ரெய்னா 5 ரன்கள் எடுத்து ரஷித் கானிடம் அதே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார். 113 ரன்கள் எடுத்திருந்த போது அந்த அணியின் ஸ்மித் புவனேஷ்குமார் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஆஷிஷ் நெஹ்ரா பந்துவீச்சில் கேட்சாகி பெவிலியன் திரும்பினார்.
அதே ஓவரில் 115 ரன்கள் எடுத்திருந்தபோது குஜராத் லயன்ஸின் குல்கர்னி ரஷித் கானிடம் ரன் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 37 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக ராய் 31 ரன்களையும் தினேஷ் கார்த்திக் 30 ரன்களையும் எடுத்திருந்தனர். 136 ரன்கள் என்ற எளிய இலக்குடன் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் களத்தில் உள்ளது.