மும்பை : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி - ரோகித் சர்மா களமிறங்குவதாக வெளியான தகவல் குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும், அனைவரின் கவனமும் ஜூன் மாதம் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் தான் உள்ளது. ஏற்கனவே இந்திய அணி நிர்வாகிகளான ராகுல் டிராவிட், அஜித் அகர்கர் உள்ளிட்டோர் கேப்டன் ரோகித் சர்மாவை சந்தித்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை கொண்டு உத்தேச அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி களமிறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் வீரர்களான கில்கிறிஸ்ட், வாஹன் ஆகியோர் நடத்தி வரும் பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் ரோகித் சர்மா பேசுகையில், ஐபிஎல் தொடரின் போது எந்த நிர்வாகியையும் நான் சந்திக்கவில்லை. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் துபாயில் இருக்கிறார். ராகுல் டிராவிட் மும்பையில் இருக்கிறார். ஆனாலும் நாங்கள் யாரும் சந்திக்கவில்லை. தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நான், ராகுல் டிராவிட் மற்றும் அஜித் அகர்கர் ஆகிய மூவரில் யாராவது வெளிப்படையாக சொல்லும் வரை யாரும் எதையும் நம்ப தேவையில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஐபிஎல் தொடரில் உள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்த கேள்விக்கு, நிச்சயமாக இம்பேக்ட் பிளேயர் விதிகள் எனக்கு ஏற்புடையதல்ல. ஏனென்றால் ஆல்ரவுண்டரிகளுக்கான வேலையை இந்த விதி குறைக்கிறது. சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு பவுலிங் செய்யவே வாய்ப்பு கிடைப்பதில்லை. அது இந்திய அணிக்கும் சரி, கிரிக்கெட்டுக்கும் சரி.. நல்லதல்ல என்று கருதுகிறேன். ஆனால் 12 வீரர்கள் இருக்கும் போது அது கூடுதலாக பொழுதுபோக்கை அளிக்கிறது என்று தெரிவித்தார்.