கராச்சி: 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுடனான போட்டியில் விளையாடப்போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த முடிவு ஒரு போட்டியோடு நின்றுவிடாது என்றும், எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்நாட்டின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதில் பிப்ரவரி 15 அன்று இலங்கையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் போட்டியை மட்டும் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப், "இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மூலம் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகிய அமைப்புகள் பெரும் லாபம் ஈட்டி வந்தன. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பொதுவான இடங்களில் போட்டிகளை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால், வங்கதேச அணியைத் தொடரிலிருந்து நீக்கிய விவகாரம் பல விஷயங்களை மாற்றிவிட்டது" என்றார்.
"பாதுகாப்பு காரணங்களுக்காக வங்கதேசம் இந்தியா வர மறுத்தபோது, அதை ஐசிசி எளிதாக எடுத்துக் கொண்டது. ஆனால் இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. கடந்த காலத்தைப் போல இல்லாமல், பாகிஸ்தான் இப்போது வங்கதேசத்திற்கு ஆதரவாக நிற்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றிப் பாகிஸ்தான் கவலைப்படாது என்று ரஷித் லத்தீப் கூறியுள்ளார். "இது அதிர்ச்சியான முடிவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு இது புதிதல்ல. கடந்த காலத்திலேயே நாங்கள் இதைச் செய்திருக்க முடியும். ஆனால் அப்போது செய்யவில்லை. இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி விதிக்கும் தண்டனைகள் குறித்தோ, ஏற்படும் நஷ்டம் குறித்தோ கவலைப்படவில்லை. இந்த விவகாரம் பிப்ரவரி 15 போட்டியோடு நிற்கும் என்று நான் கருதவில்லை. எதிர்காலத்திலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளைப் பாகிஸ்தான் புறக்கணிக்கவே செய்யும்" என்று எச்சரித்துள்ளார்.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா மற்றும் வருவாய் இழப்பு குறித்துப் பேசிய அவர், "இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதற்காக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் ஐசிசி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மிகப்பெரிய ஒப்பந்தம் செய்துள்ளது. போட்டிகள் நடக்காவிட்டால் ஒளிபரப்பு நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். விராட் கோலி பாகிஸ்தான்ல டெஸ்ட் ஆடவில்லை, பாபர் அசாம் இந்தியாவில் டெஸ்ட் ஆடவில்லை. எனவே பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியாவுக்கு எதிரானது என்பதை விட, ஐசிசியை நேரடியாகப் பாதிக்கும் ஒன்றாகவே இருக்கும்," என்றார்.
மேலும், "ஜெய் ஷா ஐசிசிக்குச் சென்ற பிறகு அந்த அமைப்பை வலுப்படுத்தியுள்ளார். ஆனால், இப்போது மற்ற நாடுகளும் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக முன்வைக்கத் தொடங்கியுள்ளன" என்று கருத்து தெரிவித்தார்.
தற்போது நிலைமை மோசமாக இருந்தாலும், போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக அடைக்கப்படவில்லை என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். "உண்மையான முதலீட்டாளர்கள் இதற்கான தீர்வைக் காண்பார்கள். அது நடக்கவில்லை என்றால் உலக கிரிக்கெட்டிற்கு அது பேரழிவாக அமையும். எங்கள் நாட்டில் இது போன்ற முடிவுகளைத் திரும்பப் பெறுவது சகஜம் தான். அரசுகளால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். 24 மணி நேரத்தில் எதுவும் நடக்கலாம்" என்று ரஷித் லத்தீப் குறிப்பிட்டு இருக்கிறார்.